சுவிட்சர்லாந்து மற்றும் வெளிநாடுகளில் போதைப்பொருள் வலையமைப்புக்கு எதிராக பெரிய நடவடிக்கை

சுவிட்சர்லாந்து மற்றும் வெளிநாடுகளில் போதைப்பொருள்–பணமோசடி வலையமைப்புக்கு எதிராக பெரிய நடவடிக்கை
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பணமோசடி தொடர்பான சர்வதேச குற்றவியல் வலையமைப்புக்கு எதிராக சுவிட்சர்லாந்திலும் பல வெளிநாடுகளிலும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரிய நடவடிக்கையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“வோட் கன்டோனல் காவல் துறை” வெளியிட்ட தகவலின்படி, சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டவர்களில் Bern கன்டோனில் வசிக்கும் இருவரும், Vaud கன்டோனில் வசிக்கும் ஒருவரும் அடங்குகின்றனர்.
ஏப்ரல் 28ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, பல ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணைகளின் விளைவாகும். போதைப்பொருள் விற்பனையால் கிடைத்த பணம், பண பரிமாற்ற முகவர்கள் மூலம் சட்டவிரோதமாக மறைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த குற்றவியல் அமைப்பு சுவிட்சர்லாந்தின் பல கன்டோன்களிலும், பல்வேறு நாடுகளிலும் செயல்பட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை Vaud, Bern, Solothurn, Zurich, St.Gallen மற்றும் Lucerne கன்டோன்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை Nigeria, France மற்றும் Greece நாடுகளிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

Europol மற்றும் அமெரிக்காவின் Drug Enforcement Administration (DEA) ஆகியவை இந்த நடவடிக்கையை ஒருங்கிணைத்தன. மேலும் Fedpol மற்றும் Bundesamt für Zoll und Grenzsicherheit (BAZG) ஆகிய சுவிஸ் கூட்டாட்சி அமைப்புகளும் ஒத்துழைத்தன.
விசாரணைகளின் போது Lausanne, Bern மற்றும் Lucerne நகரங்களில் உள்ள பண பரிமாற்ற நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. கணினி சாதனங்கள் மற்றும் பல இலட்சம் சுவிஸ் பிராங்குகள் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nigeria நாட்டில் பல கட்டிடங்களும் சொத்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சர்வதேச நீதித்துறை ஒத்துழைப்பின் கீழ் இந்த நடவடிக்கையில் Vaud நிதி குற்றப்பிரிவு அதிகாரிகளும் நேரடியாக பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.





