கோசாவ் பகுதியில் கடத்தல் எச்சரிக்கை: பல மணி நேர விசாரணைக்கு பின் தகவல் போலி என உறுதி
கோசாவ் பகுதியில் கடத்தல் எச்சரிக்கை: பல மணி நேர விசாரணைக்கு பின் தகவல் போலி என உறுதி

கோசாவ் பகுதியில் கடத்தல் எச்சரிக்கை: பல மணி நேர விசாரணைக்கு பின் தகவல் போலி என உறுதி
சென்ட்கேலன் கன்டோனின் கோசாவ் (Gossau) பகுதியில் ஒருவர் கடத்தப்பட்டு கட்டிப்போட்டு வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சென்ட்கேலன் கன்டோனல் காவல் துறை பெரும் போலீஸ் நடவடிக்கையை மேற்கொண்டது. ஆனால் பல மணி நேர விசாரணைக்கு பின்னர் அந்த தகவல் பொய்யானது என தெரியவந்துள்ளது.
வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 2.30 மணிக்குப் பின்னர், மூன்றாம் நபர் ஒருவர் அவசர அழைப்பு மையத்தை தொடர்புகொண்டு, இரண்டு பேர் ஒருவர்ை கடத்தி நாற்காலியில் கட்டிப்போட்டு வைத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
அவர் கூறியதன்படி, இந்த சம்பவம் போதைப்பொருள் தொடர்புடைய சூழலுடன் இணைந்திருக்கலாம் என்றும், சம்பவத்தின் படங்களை தமக்கு காட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த தகவலைத் தொடர்ந்து, சென்ட்கேலன் கன்டோனல் காவல் துறையின் பல ரோந்து குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன. குற்றப்பிரிவு நிபுணர்கள், விசேட தலையீட்டு அணி மற்றும் ட்ரோன் இயக்குநர்களும் நடவடிக்கையில் இணைக்கப்பட்டனர். அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகமும் சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்டது.
அடுத்த சில மணிநேரங்களில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நபரை கண்டுபிடிக்கவும் சம்பவத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
நள்ளிரவுக்குப் பின்னர், போலீசார் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்ட படங்களை பெற்றனர். பின்னர் அவை உண்மையானவை அல்ல என்றும், தகவல் அளித்த நபரே ஏமாற்றப்பட்டிருந்தார் என்றும் தெரியவந்தது.
மேலும், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நபரும் பாதுகாப்பாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றச்செயல்கள் தொடர்பாக பொய்யான தகவல்கள் வழங்குவது சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என சென்ட்கேலன் கன்டோனல் காவல் துறை மீண்டும் எச்சரித்துள்ளது.






