டிஜிட்டல் அரசு என்றாலும் 60 கோடி தாள்கள் வாங்கும் சுவிஸ் அரசு! ஏன் இந்த முரண்பாடு?
டிஜிட்டல் அரசு என்றாலும் 60 கோடி தாள்கள் வாங்கும் சுவிஸ் அரசு! ஏன் இந்த முரண்பாடு?

டிஜிட்டல் மயமாக்கலை முன்னிறுத்தி வரும் சுவிட்சர்லாந்து மத்திய அரசே, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்காக சுமார் 60 கோடி நகல் தாள்களை வாங்க திட்டமிட்டிருப்பது தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டாட்சி கட்டிடங்கள் மற்றும் தளவாடங்கள் அலுவலகம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான காகித விநியோக ஒப்பந்தத்திற்காக புதிய டெண்டரை வெளியிட்டுள்ளது.
இந்த அளவிலான காகிதங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கினால், அது உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் மலையை விட ஏழு மடங்கு உயரம் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
இதற்கிடையில், மத்திய அரசு தனது டிஜிட்டல் உத்தியில், அரசு சேவைகள் மற்றும் உள்நாட்டு நிர்வாக செயல்முறைகள் அனைத்தையும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதை இலக்காக அறிவித்துள்ளது.
ஆனால் இந்த புதிய காகித கொள்முதல் திட்டம், அந்த இலக்குடன் முரண்படுவதாக பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கு பதிலளித்துள்ள கூட்டாட்சி கட்டிடங்கள் மற்றும் தளவாடங்கள் அலுவலகம், கடந்த 20 ஆண்டுகளில் காகிதப் பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரசு ஊழியர் ஆண்டுக்கு 15 ஆயிரத்திற்கும் அதிகமான தாள்களை பயன்படுத்திய நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை சுமார் 3 ஆயிரம் தாள்களாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், பசுமைக் கட்சியின் தேசிய கவுன்சிலர் கெர்ஹார்ட் ஆண்ட்ரே, ஆண்டுக்கு ஒரு ஊழியருக்கு 3 ஆயிரம் பக்கங்கள் என்பது இன்னும் அதிகமான எண்ணிக்கையே எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, டிஜிட்டல் ஆவணங்களை அச்சிட்டு, கையொப்பமிட்டு, மீண்டும் ஸ்கேன் செய்யும் பழக்கம் 2026 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
அதேவேளை, காகிதப் பயன்பாட்டைக் குறைப்பது முக்கியம் என்றாலும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களும் சுற்றுச்சூழலுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் அவர் நினைவூட்டியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தில், காகிதமற்ற நிர்வாகம் இன்னும் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்ற கேள்வியை இந்த விவகாரம் மீண்டும் எழுப்பியுள்ளது.





