சென்ட்கேலன் கன்டோனில் தொடர்ச்சியான கார் உடைப்பு சம்பவங்கள் – இருவர் போலீஸ் கட்டுப்பாட்டில்
சென்ட்கேலன் கன்டோனில் தொடர்ச்சியான கார் உடைப்பு சம்பவங்கள் – இருவர் போலீஸ் கட்டுப்பாட்டில்

சென்ட்கேலன் கன்டோனில் தொடர்ச்சியான கார் உடைப்பு சம்பவங்கள் – இருவர் போலீஸ் கட்டுப்பாட்டில்
சென்ட்கேலன் கன்டோனில் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பல இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொரு நபர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, சென்ட்கேலன் (St.Gallen) நகரில் Werkstrasse பகுதியில் உள்ள அடித்தள வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த எட்டு கார்களில் உடைத்து நுழைந்து திருட்டு இடம்பெற்றதாக சென்ட்கேலன் கன்டோனல் காவல் துறை தெரிவித்துள்ளது.
அதேவேளை Bachstrasse பகுதியில் அமைந்திருந்த பல தற்காலிக கட்டிடங்களிலும் அறியப்படாத நபர்கள் உடைத்து நுழைந்ததாக கூறப்படுகிறது.

இதே இரவு Staad பகுதியில் உள்ள பல அடித்தள வாகனத் தரிப்பிடங்களிலும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக Risegg மற்றும் Grüeblistrasse பகுதிகளில் உள்ள தரிப்பிடங்களில் நிறுத்தப்பட்டிருந்த மொத்தம் ஏழு கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் Au (அவ்) பகுதியில் Hauptstrasse மற்றும் Werkstrasse பகுதிகளில் அமைந்திருந்த இரு அடித்தள தரிப்பிடங்களிலும் வாகன உடைப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த திருட்டுகளில் சிறுபணங்கள், அடையாள அட்டைகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் சாவிகள் உள்ளிட்ட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்த சொத்துச் சேதம் 10,000 சுவிஸ் பிராங்குகளை தாண்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Staad பகுதியில் கார் உடைப்பு சம்பவங்கள் குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ட்கேலன் கன்டோனல் காவல் துறையினர் Staad தொடருந்து நிலையம் அருகே 28 வயதுடைய சுவிஸ் பெண்ணை கைது செய்தனர்.
அதேவேளை, 38 வயதுடைய துருக்கி நாட்டவர் ஒருவர் திங்கட்கிழமை காலை Thal பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இந்த இருவருக்கும் மேற்கண்ட திருட்டுச் சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதையும், பல்வேறு சம்பவ இடங்கள் ஒன்றோடொன்று தொடர்புடையவையா என்பதையும் அதிகாரிகள் தற்போது விசாரித்து வருகின்றனர்.
சமீப காலமாக சுவிட்சர்லாந்தில் அடித்தள வாகனத் தரிப்பிடங்களை குறிவைத்து இடம்பெறும் கார் உடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.© Kapo SG





