“அடுத்த 50 ஆண்டுகள்” அரசியல் திட்டத்தை முன்வைத்த அக்கினிப்பறவைகள்
“அடுத்த 50 ஆண்டுகள்” அரசியல் திட்டத்தை முன்வைத்த அக்கினிப்பறவைகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் “அடுத்த 50 ஆண்டுகள்” அரசியல் திட்டத்தை முன்வைத்த அக்கினிப்பறவைகள்
சுவிட்சர்லாந்தில் வாழும் அடுத்த தலைமுறை ஈழத்தமிழர் இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள “Phoenix – The Next Generation” எனப்படும் “அக்கினிப்பறவைகள்” அமைப்பின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலையும், வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயர்மாற்றத்தின் 50ஆம் ஆண்டு நினைவு காலத்தையும் முன்னிட்டு பல்வேறு நினைவு நிகழ்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சுவிட்சர்லாந்தின் Bern மாநிலத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகள், அரசியல் விழிப்புணர்வும் இனஅடையாளப் பாதுகாப்பும் மையப்படுத்தப்பட்ட ஒன்றாக அமைந்திருந்தது. குறிப்பாக “I Am the Next 50 Years” என்ற தலைப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம், ஈழத்தமிழர்களின் எதிர்கால அரசியல் திசை மற்றும் அடுத்த தலைமுறையின் பொறுப்புணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

இவ்வறிக்கையின் மூலம், ஈழத்தமிழர்களின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு, சுயநிர்ணய உரிமை மற்றும் தேசிய இறையாண்மை ஆகிய அடிப்படை கோட்பாடுகளை மையமாகக் கொண்டு எதிர்கால அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த உரிமைகள் அனைத்தும் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் நியாயமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளாகும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிகழ்வில் பங்கேற்ற சுமார் 100 முதல் 150 வரையிலான பொதுமக்களுக்கு, தமிழ், ஆங்கிலம் மற்றும் சுவிட்சர்லாந்தின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றான ஜெர்மன் மொழிகளில் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் அச்சு வடிவில் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்திலும் ஈழத்தமிழர்கள் தங்களது அரசியல் உரிமைகள் மற்றும் விடுதலைக்கான கோரிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கத் தயாராக உள்ளனர் என்பதையும் இந்த அறிக்கை பதிவு செய்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் வளர்ந்து வரும் புதிய தலைமுறை ஈழத்தமிழர்களின் அரசியல் ஈடுபாடு மற்றும் இனஅடையாள உணர்வை வெளிப்படுத்தும் நிகழ்வாக இது பார்க்கப்படுகின்றது.





