ஃப்ரிபூர்க் கன்டோனில் போலி போலீஸ் மோசடி – அதிகாரப்பூர்வ போலீஸ் எண்ணையே பயன்படுத்திய கும்பல்
ஃப்ரிபூர்க் கன்டோனில் போலி போலீஸ் மோசடி – அதிகாரப்பூர்வ போலீஸ் எண்ணையே பயன்படுத்திய கும்பல்

ஃப்ரிபூர்க் கன்டோனில் போலி போலீஸ் மோசடி – அதிகாரப்பூர்வ போலீஸ் எண்ணையே பயன்படுத்திய கும்பல்
ஃப்ரிபூர்க் கன்டோனில் கடந்த சில நாட்களாக “போலி போலீஸ்” மற்றும் “போலி வங்கி அதிகாரி” மோசடிகள் வேகமாக அதிகரித்து வருவதாக ஃப்ரிபூர்க் கன்டோனல் போலீசார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக மோசடிக்காரர்கள், போலீசாரின் உண்மையான அவசர தொடர்பு இலக்கத்தையே பயன்படுத்தி மக்களை ஏமாற்றியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மே 15 ஆம் தேதி முதல் இதுவரை சுமார் 30 மோசடி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 25 முயற்சிகள் தோல்வியடைந்திருந்தாலும், குறைந்தது மூன்று சம்பவங்களில் மோசடிக்காரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த மோசடிகளால் சுமார் 10,000 சுவிஸ் பிராங்குகள் பணத்துடன் நகைகளும் பறிபோயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடிக்காரர்கள் “Spoofing” எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களின் தொலைபேசியில் உண்மையான போலீஸ் கட்டுப்பாட்டு மைய எண்ணான “026 347 01 17” என்பதையே காட்டியுள்ளனர். இதனால் பலர் அந்த அழைப்புகளை உண்மையான போலீஸ் அழைப்பாக நம்பியதாக கூறப்படுகிறது.

இந்த மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்ய ஃப்ரிபூர்க் கன்டோனல் போலீசார் சனிக்கிழமை விரிவான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
புல் (Bulle) பகுதியில் நடத்தப்பட்ட விசேட வாகன சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று A12 நெடுஞ்சாலையில் பெர்ன் நோக்கி தப்பிச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் உத்தரவுகளை பின்பற்ற மறுத்த ஓட்டுநர், அதிக ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மற்ற வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் Flamatt பகுதியில் அந்த வாகனம் கண்காணிப்பில் இருந்து தப்பியிருந்தாலும், அதே இரவு சுமார் 10 மணியளவில் மீண்டும் A12 நெடுஞ்சாலையில் லௌசான் நோக்கிச் செல்வதை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்னர் வோ கன்டோனல் போலீசாரின் உதவியுடன் Saint-Saphorin (VD) பகுதியில் எந்த சிக்கலும் இல்லாமல் அந்த வாகனம் நிறுத்தப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் 26 வயதுடைய இத்தாலிய நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மேற்கண்ட மோசடி சம்பவங்களுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஃப்ரிபூர்க் அரசுத் தரப்பு வழக்கறிஞரின் உத்தரவின் பேரில் அவர் தற்போது விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மோசடிகளைத் தவிர்க்க பொதுமக்கள், குறிப்பாக வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஃப்ரிபூர்க் கன்டோனல் போலீசார் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
“போலீசார் ஒருபோதும் உங்கள் பணம், நகை அல்லது வங்கி அட்டைகளை பாதுகாப்புக்காக கேட்கமாட்டார்கள்” என்றும், “தொலைபேசியில் தெரியும் இலக்கத்தை மட்டும் நம்ப வேண்டாம்” என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், யாரிடமும் கடவுச்சொல் அல்லது வங்கி தகவல்களை பகிரக்கூடாது என்றும், சந்தேகமான அழைப்புகள் வந்தால் உடனடியாக அழைப்பை துண்டித்து 117 என்ற அவசர போலீஸ் இலக்கத்தை தொடர்புகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





