ஜெனீவா நீச்சல் குளங்களில் புர்கினி தடை விவாதம் தொடர்கிறது
ஜெனீவா நீச்சல் குளங்களில் புர்கினி தடை விவாதம் தொடர்கிறது
சுவிட்சர்லாந்தின் Geneva கன்டோனில் பொதுநல நீச்சல் குளங்களில் புர்கினி அணிவதைத் தடைசெய்யும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல மாதங்களாக நீடித்த கடும் அரசியல் மற்றும் சமூக விவாதங்களுக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின் படி, முழங்காலுக்கு மேல் நீளமுடையதும் கைகள் வெளிப்படையாக இருக்கும் வகையிலான ஒரே துண்டு அல்லது இரு துண்டு நீச்சல் உடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் புர்கினி போன்ற முழு உடலை மூடும் உடைகள் நீச்சல் குளங்களில் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்த முன்மொழிவு 53 ஆதரவுடன், 38 எதிர்ப்புகளுடன் மற்றும் 6 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நிறைவேற்றப்பட்டது. சட்டத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள், நீச்சல் குளங்கள் எந்தவித கட்டாயங்களும் இல்லாத சுதந்திரமான இடங்களாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மறுபுறம், இந்தத் தடை தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலும், குறிப்பிட்ட சமுதாயத்தை இலக்கு வைக்கும் பாகுபாடான நடவடிக்கையாகவும் உள்ளது என்று எதிர்க்கட்சியினர் மற்றும் மனித உரிமை ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், State Council of Geneva இந்த சட்டம் சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என எச்சரித்துள்ளது. இதனால், இந்த விவகாரம் எதிர்காலத்திலும் தொடர்ந்து அரசியல் மற்றும் நீதிமன்ற நிலைகளில் விவாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
சுவிட்சர்லாந்தில் மதச்சார்பின்மை, தனிநபர் சுதந்திரம் மற்றும் பொது இடங்களின் விதிமுறைகள் குறித்து நடைபெறும் பெரிய விவாதத்தின் ஒரு பகுதியாக இந்த தீர்மானம் பார்க்கப்படுகிறது. WRS





