சுவிற்சர்லாந்தில் எழுத்தாளர் ஆதிலட்சுமி சிவகுமார் எழுதிய “முட்காட்டுப் பூ” நாவல் வெளியீடு
சுவிற்சர்லாந்தில் எழுத்தாளர் ஆதிலட்சுமி சிவகுமார் எழுதிய “முட்காட்டுப் பூ” நாவல் வெளியீடு
சுவிற்சர்லாந்து பேர்ன் மாநகர ஐரோப்பா திடல், தமிழர்களறி ஆவணக்காப்பக கேட்போர்கூடத்தில் கடந்த 22.11.2025 அன்று ஈழத்தின் மூத்த பெண் ஆளுமைகளில் ஒருவரான சுவிற்சர்லாந்து வாழ் திருமதி.ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் எழுதிய “முட்காட்டுப்பூ” நாவல் தமிழர்களறியின் வெளியீடாக வெளிவந்தது. இந் நிகழ்வு தமிழர்களறி ஆவணக்காப்பகத்தைச் சேர்ந்த திரு. தில்லையம்பலம் சிவகீர்த்தி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கல விளக்கினை நூலாசிரியர் திருநிறை ஆதிலட்சுமி சிவகுமார், சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், சிவபசி. குழந்தை விக்னேஸ்வரன், திருமதி. நந்தினி முருகவேள், திருநிறை. பொன்னம்பலம் முருகவேள், திருமதி. ரதி கமலநாதன், திருமதி. சிவதர்சினி ராகவன், திருநிறை. து.திலக் (கிரி), திருநிறை. இராஜதுரை வசந்தன் ஆகியோரால் ஏற்றிவைக்கப்பட்டது.
மாவீரர் பொதுச்சுடரினை திருமதி அமலா சேரலாதன் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து வருகை தந்த அனைவரும் மாவீர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினர். அனைத்து மாவீரர்களையும், படுகொலை செய்யப்பட்ட மக்களையும், நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூரும் அகவணக்கம் நடைபெற்றது.
ஆன்மீகத் தொடுதலாக அமைந்த நல்லாசியுரையை சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் வழங்கினார். வரவேற்புரையினையும் நிகழ்வின் அறிமுகவுரையையும் திரு. தில்லையம்பலம் சிவகீர்த்தி வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து நூலாசிரியர் திருமதி ஆதிலட்சுமி சிவகுமார்
நூலை வெளியிட்டு வைக்க முதன்மைப் பிரதிகளை
• செந்தமிழ் அருட்சுனையர் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார்
• செந்தமிழ் அருட்சுனையர் சிவபசி. குழந்தை விக்னேஸ்வரன்
• தமிழர் களறியைச் சேர்ந்த திருநிறை. இராசதுரை வசந்தன்
ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தொடர் நிழ்வாக தமிழ்நாட்டிலிருந்து பாவலர் அறிவுமதி வழங்கிய சிறப்பு வாழ்த்துரை வெண்திரையில் ஒளிவீச்சாக காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து
நயப்புரையினை திருமதி பிறேமினி அற்புதராசா வழங்கினார். நூல் வெளியீட்டு நிகழ்வின் மற்றுமொரு பரிநாமமாக இளைய தலைமுறைப் பிள்ளைகள் பல நாட்களுக்கு முன்னர் நூலை வாசித்து அரங்கில் ஒருமித்து நூலை நயந்துரைத்து நின்ற விதம் பலரையும் உள்ளீர்த்ததோடு நூலைப்படிக்கும் ஆர்வத்தையும் தூண்டி நின்றது எனலாம். செல்வி.சபீரா சண்முகலிங்கம், செல்வி.அமிர்தவர்சினி சுரேஸ்குமார், செல்வி.அருளினி முருகவேள், செல்வி. அபிராமி சுரேஸ்குமார், செல்வி.சம்யுத்தா சசிகுமார், செல்வி. மிருணாளினி மஞ்சுதன், செல்வி.மகிழினி சிவகீர்த்தி ஆகியோர் வாசித்தளித்தனர். இவ்வாசித்தல் ஒவ்வொன்றும் நிகழ்வின் சிறப்பையும் ஆழத்தையும் உயர்த்தின.
தொடர்ந்து சிறப்புரையினை திரு. து. திலக்(கிரி) நிகழ்த்தினார். ஏற்புரையினை நூலாசிரியர் திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் வழங்கினார். அவர் தனது உரையில்
“இன்று எனது தந்தையின் நினைவுநாள், எதிர்பாராத விதமாக இன்று எனது நூல் இந்நளில் அவரது நினைவுகளோடு இங்கு வெளியிடப்பட்டுள்ளது. இதில் எனக்கு ஒருவகையில் உளநிறைவு உண்டு, ஏனெனில் எனது தந்தையாரின் மொழிதான் எனது எழுத்தில் தவழ்ந்துகொண்டிருக்கின்றது. நான் 42 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

எங்கிருந்தாலும் எழுத்தை நான் கைவிட்டதில்லை. எப்படி உணவில்லாமல் இருக்கமுடியாதோ அப்படியே எழுதாமல் படிக்காமல் இருக்கமுடியாது. எழுத்தையும் வாசிப்பினையும் கைவிட்டால் நான் வெறும் சடமாகிப்போய்விடுவேன். ஆகவே நான் தொடரும் எனது எழுத்து, தாயகத்தில் இருந்தபோது பலரும் எனக்கு ஊட்டிய நம்பிக்கை, ஈடுபாடு, ஆறுதல், உற்சாகப்படுத்தல், தேசியத்தலைவரிடம் இருந்து கிடைத்த பரிசு – அவர் என் எழுத்தின்மீது இருந்த நம்பிக்கை, புலம்பெயர்ந்த பிறகு நான் சுவிஸ் நாட்டிற்கு வந்த பின்னர் நான் அடையாளம் கண்டுகொண்ட அல்லது என்னை அடையாளம் கண்டுகொண்ட தமிழர் களறியோடு நான் பொருந்திக்கொண்டேன். தமிழாலும் – தமிழினப்பற்றாலும் அந்த நெருக்கம் எங்களுக்குள் இன்னும் இன்னும் இறுகிக்கொண்டிருக்கின்றது.
என்னுடைய மண் அதை நான் நிறைய நேசிக்கின்றேன். அந்த மண்ணிற்காக வாழ்ந்தவர்களை, வாழ்ந்துகொண்டிருப்பவர்களை நிறைய நேசிக்கின்றேன் அந்த வகையில் எனது எழுத்துக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நூல் மிகவும் வரலாற்றிக்கு முக்கியம் என நினைக்கின்றேன். இந்நூலை நான் மூன்றாம் ஆளாக நின்று எழுதியபோது எழுத்து அந்நியப்பட்டிருந்தது. ஆகவே இதனை தன்நிலை எழுத்தாக மாற்றிக்கொண்டு எழுதினேன். அதன் பிறகு எழுத்து என்னை உணர்வுபூர்வமாக தொற்றிக்கொண்டது”
என்றார்.
“முட்காட்டுபூ” நூல் வெளியீடானது சிறந்தமுறையில் நடைபெற உதவிய நூலாசிரியர், பேச்சாளர்கள், செயலாற்றியோர், இளம் வாசகர்கள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழர்களறியின் சார்பாளராக திருநிறை. இன்பம் அருளையா நன்றியுரை வழங்கினார்.
இவ் வெளியீட்டு நிகழ்வு, இரவு உணவு வழங்கலுடன் இனிதே நிறைவு பெற்றது.
“தமிழர்களறி” ஆவணக்காப்பகம்,
பேர்ன்,
சுவிற்சர்லாந்து.





