170 மில்லியன் பிராங்க் கடன் நெருக்கடி: வெட்சிகான் மருத்துவமனைக்கு வந்த முக்கிய தீர்வு!
170 மில்லியன் பிராங்க் கடன் நெருக்கடி: வெட்சிகான் மருத்துவமனைக்கு வந்த முக்கிய தீர்வு!

170 மில்லியன் பிராங்க் கடன் நெருக்கடி: வெட்சிகான் மருத்துவமனைக்கு வந்த முக்கிய தீர்வு!
சுவிட்சர்லாந்தில் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள வெட்சிகான் மருத்துவமனைக்கு முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையின் பங்குதாரர்களாக உள்ள 11 நகராட்சிகளும், துர்காவ் மாநிலத்திற்கு முழுமையாகச் சொந்தமான தர்மெட் ஏஜி நிறுவனத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.
இதன் மூலம், ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், GZO AG எனப்படும் சூரிச்சர் ஓபர்லாந்து சுகாதார மையத்தின் 51 சதவீத பங்குகள் தர்மெட் வசம் செல்லும். மீதமுள்ள 49 சதவீத பங்குகள் தற்போதைய பங்கீட்டு முறையின்படி 11 நகராட்சிகளிடம் தொடரும்.
இந்த முன்மொழிவின் கீழ், தர்மெட் நிறுவனம் மருத்துவமனையில் 35 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை பங்கு மூலதனமாக முதலீடு செய்யும். அதற்கு மேலாக, புதிய மருத்துவமனை கட்டிடத்திற்காக மேலும் 35 மில்லியன் பிராங்குகளை கடனாக வழங்கவும் முன்வந்துள்ளது.
அதேவேளை, மருத்துவமனையின் கடன் வழங்குநர்களுக்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் 39.3 முதல் 47.5 சதவீதம் வரையிலான ஈவுத்தொகை கிடைக்கக்கூடும் என GZO நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சலுகை தற்போது 2027ஆம் ஆண்டின் இறுதி வரை பயன்படுத்தக்கூடிய தெரிவாக உள்ளது. அதற்கு முன் GZO மற்றும் கடன் வழங்குநர்களுக்கு இடையிலான சமரச ஒப்பந்தம் நிறைவேற வேண்டும். மேலும், தர்மெட் மேற்கொள்ளும் விரிவான ஆய்வும் சாதகமாக முடிவடைய வேண்டும்.
இதற்கிடையில், மருத்துவமனையை காப்பாற்ற மேலும் இரண்டு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. சுகாதார ரியல் எஸ்டேட் துறையில் செயல்படும் இன்ஃப்ராகோர் நிறுவனம் 55 மில்லியன் சுவிஸ் பிராங்க் மதிப்பிலான விற்பனை மற்றும் குத்தகை திட்டத்தை முன்வைத்திருந்தது.

ஆனால், அந்த முன்மொழிவில் எதிர்பார்த்த அளவு நிதி பலன் கிடைக்காது என GZO நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுவிஸ் மெடிக்கல் நெட்வொர்க்கின் மற்றொரு முன்மொழிவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வெட்சிகான் மருத்துவமனை, புதிய கட்டிடத் திட்டத்திற்காக 2014ஆம் ஆண்டு பெற்ற 170 மில்லியன் சுவிஸ் பிராங்க் பத்திரக் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது.
எனினும், தற்போதைய நிலையில் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் வழமைபோல் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கிய கட்டமாக, கடன் வழங்குநர்களின் தீர்மானகரமான கூட்டம் அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் நடைபெற உள்ளது.
அந்தக் கூட்டத்தின் முடிவே, வெட்சிகான் மருத்துவமனையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய தருணமாக அமையக்கூடும்.






