சூரிச்சில் பிரார்த்தனை கூட்டம் ரத்தக்கலரியாக மாறியது! அதிர்ச்சி தாக்குதல்!
சூரிச்சில் பிரார்த்தனை கூட்டம் ரத்தக்கலரியாக மாறியது! அதிர்ச்சி தாக்குதல்!

சூரிச்சில் உள்ள வால்ட் பகுதியில் கடந்த ஆண்டு தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி, வால்ட் சீர்திருத்தத் திருச்சபையில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, 42 வயதுடைய ஒருவர் தனது 85 வயது வளர்ப்புத் தாயின் அருகில் அமர்ந்து அவருடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடத்தையை கவனித்த தேவாலயப் பொறுப்பாளர், அவரை எச்சரித்து வெளியேறுமாறு கூறியுள்ளார். பின்னர் வளர்ப்புத் தாய் தேவாலயத்தை விட்டு வெளியேற முயன்றபோது, குற்றம் சாட்டப்பட்ட நபர் அவரது வழியை மறித்ததாக கூறப்படுகிறது.
மீண்டும் தலையிட்ட தேவாலயப் பொறுப்பாளர் காவல்துறையை அழைக்க முயன்ற வேளையில், சந்தேக நபர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினார்.
முதல் குண்டு தரையில் பட்டது. இரண்டாவது குண்டு தேவாலயப் பொறுப்பாளரைத் தவறவிட்டு அருகிலிருந்த வாகனத்தின் கண்ணாடியில் பாய்ந்தது.

அதன்பிறகு, வயதான பெண்ணை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற தேவாலயப் பொறுப்பாளரை நோக்கி மூன்றாவது முறை சுடப்பட்டதில், குண்டு அவரது தொடையில் பாய்ந்தது.
குண்டு சுமார் 16 சென்டிமீட்டர் ஆழத்தில் உடலில் பதிந்ததால், அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில், தனது வளர்ப்புத் தாயின் உயிருக்கும், தேவாலயப் பொறுப்பாளரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதை அறிந்தே அவர் செயல்பட்டதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
கொலை முயற்சி மற்றும் சொத்து சேதம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஏழு ஆண்டுகள் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேற்றப்படுவதும் கோரப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், போதைப்பழக்க சிகிச்சைக்காக அவரை உள்நோயாளர் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கவும் அரசுத் தரப்பு பரிந்துரைத்துள்ளது.
தற்போது வின்டர்தூர் சிறையில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கில், நீதிமன்றம் எப்போது இறுதித் தீர்ப்பை வழங்கும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.





