சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் Phishing மோசடிகள்: மக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் Phishing மோசடிகள்: மக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் Phishing மோசடிகள்: மக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் இணைய வழி நிதி மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக “Phishing” எனப்படும் மோசடி சம்பவங்கள் 2025ஆம் ஆண்டில் கவலைக்கிடமான அளவுக்கு உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டளவில் கடந்த ஆண்டில் மட்டும் 7,409 Phishing சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 25 சதவீத அதிகரிப்பாகும். மத்திய சுவிட்சர்லாந்து பகுதிகளிலும் இந்த மோசடி முறைகள் வேகமாக பரவி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இணைய குற்றவாளிகள் தற்போது மிகவும் நவீன மற்றும் நுணுக்கமான முறைகளை பயன்படுத்தி மக்களின் தனிப்பட்ட வங்கி, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தகவல்களை திருட முயற்சித்து வருகின்றனர். வங்கிகள், ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் அல்லது பார்சல் விநியோக சேவைகள் போல நடித்து போலியான மின்னஞ்சல்கள், SMS செய்திகள், QR குறியீடுகள் மற்றும் இணையதளங்கள் மூலம் மக்களை ஏமாற்றுகின்றனர்.
பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் சுவிட்சர்லாந்து போலீசார் மற்றும் நிதித்துறை இணைந்து “LINDA” என்ற தேசிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். இந்தப் பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் மோசடிகளை தவிர்க்க உதவும் முக்கிய பாதுகாப்பு அறிவுறுத்தல்களை குறிக்கிறது.
அதன்படி, இணைய இணைப்புகள் மற்றும் இணைப்புக் கோப்புகளை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும், தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும், பொதுவான அல்லது சந்தேகத்திற்கிடமான அழைப்புகளை நம்பக்கூடாது, அவசரப்படுத்தும் தகவல்களை சந்தேகிக்க வேண்டும் மற்றும் அனுப்புநரின் விபரங்களை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் செயலிகளையே பயன்படுத்த வேண்டும் என்றும், இரண்டு நிலை பாதுகாப்பு (Two-Factor Authentication) வசதியை கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் என்றும் போலீசார் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல் வலுவான மற்றும் வெவ்வேறு கடவுச்சொற்களை பயன்படுத்துவது இணைய மோசடிகளிலிருந்து பாதுகாப்பதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஏதேனும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலை ஏற்பட்டால் உடனடியாக இணைய இணைப்பை துண்டித்து கடவுச்சொற்களை மாற்ற வேண்டும். அதோடு வங்கி அல்லது கார்டு வழங்குநருக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என்றும், சம்பவத்தை போலீசாரிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் Cybercrime மற்றும் Phishing மோசடிகள் காரணமாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. இணையத்தில் கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் சரிபார்த்து செயல்படுவதே இத்தகைய நிதி மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ள சிறந்த வழியாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
© Ceybercrime Polizei






