அழகுக்கூடத்தில் சட்டவிரோத Botox சிகிச்சைகள்: உக்ரைன் பெண்ணும் ஜெர்மன் மருத்துவரும் கைது
அழகுக்கூடத்தில் சட்டவிரோத Botox சிகிச்சைகள்: உக்ரைன் பெண்ணும் ஜெர்மன் மருத்துவரும் கைது

டியட்டிகோன் (Dietikon) அழகுக்கூடத்தில் சட்டவிரோத Botox சிகிச்சைகள்: உக்ரைன் பெண்ணும் ஜெர்மன் மருத்துவரும் கைது
சூரிச் (Zürich) கன்டோனிலுள்ள டியட்டிகோன் (Dietikon) பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு அழகுக்கூடத்தில் சட்டவிரோதமாக Botox அழகுசாதன சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், உக்ரைனைச் சேர்ந்த பெண்ணும் ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூரிச் கன்டோனல் காவல் துறை கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையின் போது இந்த நடவடிக்கை இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணைகளின் போது அங்கு பல ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் பணமாகவும், பல்வேறு மருந்துகளும் Botox மற்றும் Hyaluron தயாரிப்புகளும் கைப்பற்றப்பட்டன.
போலீஸ் விசாரணைகளின் படி, சம்பந்தப்பட்ட இருவரும் தேவையான அதிகாரப்பூர்வ அனுமதிகள் இன்றி அழகுசாதன மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வந்துள்ளனர். குறிப்பாக Botox ஊசிச் சிகிச்சைகள் முறையற்ற வகையில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 வயதுடைய உக்ரைன் பெண்ணிடம் சூரிச் கன்டோனில் இத்தகைய சிகிச்சைகளை வழங்குவதற்கு தேவையான தொழில்துறை தகுதிகள் அல்லது சான்றிதழ்கள் இல்லை என்றும், வேலை அனுமதிகளும் பெறப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, கைது செய்யப்பட்ட 72 வயதுடைய ஜெர்மன் மருத்துவருக்கும் சூரிச் கன்டோனில் மருத்துவ சேவைகளை வழங்க தேவையான கன்டோனல் தொழில்புரியும் அனுமதி (Berufsausübungsbewilligung) இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வீட்டு சோதனையில் பல்வேறு இரசாயனப் பொருட்கள் மற்றும் மருந்துகள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் சில மருந்துகள் சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வ அனுமதி பெறாதவையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிச் கன்டோனல் போலீசார் இருவரையும் கைது செய்து, சம்பந்தப்பட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சுவிட்சர்லாந்தில் அண்மைக் காலமாக சட்டவிரோத அழகுசாதன சிகிச்சைகள் குறித்து அதிகாரிகள் கடுமையான கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக Botox மற்றும் Hyaluron சிகிச்சைகள் தகுதி பெற்ற நிபுணர்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார அதிகாரிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.
மூலம்: சூரிச் கன்டோனல் காவல் துறை (Kantonspolizei Zürich)





