கிரான்ஸ்-மொன்டானா விபத்து பின்னணி: சுவிட்சர்லாந்து முழுவதும் கார்னிவல்களில் தீ பாதுகாப்பு கடும் கட்டுப்பாடு
கிரான்ஸ்-மொன்டானா விபத்து பின்னணி: சுவிட்சர்லாந்து முழுவதும் கார்னிவல்களில் தீ பாதுகாப்பு கடும் கட்டுப்பாடு
கடந்த மாதம் Crans-Montana பகுதியில் நிகழ்ந்த துயரமான விபத்து சம்பவத்தின் பின்னணியில், சுவிட்சர்லாந்து முழுவதும் நடைபெறவுள்ள கார்னிவல் விழாக்களில் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இந்த பாரம்பரிய விழாக்களில், பாதுகாப்பே முதன்மை என்ற அணுகுமுறையுடன் ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்து வருகின்றனர்.
Sierre நகரில், வழக்கமாக நடைபெறும் ‘குளிர்கால உருவப் பொம்மை எரிப்பு’ நிகழ்ச்சியை இந்த ஆண்டு நடத்த வேண்டாம் என ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் நடந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு, இத்தகைய நிகழ்வு தற்போது பொருத்தமற்றதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், திட்டமிட்டிருந்த ஊர்வலங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற பகுதிகளான Monthey மற்றும் Fribourg ஆகிய இடங்களிலும், பாதுகாப்புத் திட்டங்கள் தீவிரமாக மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளன. அவசர வெளியேறும் வழிகள் கூடுதலாக அமைக்கப்படுவதுடன், பணியாளர்களுக்கு தீ பாதுகாப்பு மற்றும் அவசர நிலை கையாளல் தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், சுவிட்சர்லாந்தின் முக்கிய கார்னிவல் நகரங்களில் ஒன்றான பாசல் (Basel) நகரில், ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் ‘மோர்கென்ஸ்ட்ரைக்’ (Morgenstreich) விழாவை முன்னிட்டு, தீயணைப்பு படையினர் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். விழாக் காலத்தில் பயன்படுத்தப்படும் பல டஜன் கார்னிவல் அடுக்குத் தளங்கள் மற்றும் கூடங்கள் முன்கூட்டியே ஆய்வு செய்யப்படவுள்ளதுடன், நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் திடீர் சோதனைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பாரம்பரிய விழாக்கள் எந்தவித அச்சமுமின்றி நடைபெற வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டவை என அதிகாரிகள் கூறுகின்றனர். சமீப சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சிக்குப் பிறகு, பாதுகாப்பு விதிமுறைகளில் எந்தவித தளர்வும் இருக்காது என்பதும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
© WRS






