மேற்கு சுவிட்சர்லாந்து குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் பாலியல் துஷ்பிரயோகம்
மேற்கு சுவிட்சர்லாந்து குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் பாலியல் துஷ்பிரயோகம்

மேற்கு சுவிட்சர்லாந்து குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் பாலியல் துஷ்பிரயோக சந்தேகம் தொடர்பாக 22 புகார்கள்
மேற்கு சுவிட்சர்லாந்து பகுதிகளில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் (Kita) தொடர்பாக பாலியல் துஷ்பிரயோக சந்தேகத்தில் 22 புகார்கள் அதிகாரிகளிடம் சென்றுள்ளதாக RTS வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்த சந்தேக புகார்கள் பல்வேறு கன்டோன்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், சம்பந்தப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களின் பெயர்களை வெளியிட சம்பந்தப்பட்ட கன்டோன் நிர்வாகங்கள் மறுத்துள்ளன.
சாட்சியமளித்த சிலர், கழிப்பறைகள் அல்லது குழந்தைகள் உறங்கும் அறைகளில் இடம்பெற்றதாக கூறப்படும் அத்துமீறல் சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளனர். குறிப்பாக, சில குழந்தைகள் ஒரு பராமரிப்பாளருடன் கழிப்பறைக்குள் பூட்டப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2024ஆம் ஆண்டு, மூன்று வயது சிறுமி ஒருவர் பராமரிப்பு மையத்திலிருந்து வீட்டிற்கு வந்து தனது தாயிடம் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறலை கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சில குடும்பங்கள் பாலியல் வன்முறை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரப்பூர்வ புகார்கள் அளித்துள்ளன. மேலும், சில தகவல்கள் பராமரிப்பு மைய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் பணியாளர்களிடமிருந்தும் கிடைத்துள்ளதாக RTS தெரிவித்துள்ளது.
பல சம்பவங்களில், விசாரணைகள் நடைபெறும் காலத்தில் தொடர்புடைய பணியாளர்கள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவங்கள், சுவிட்சர்லாந்தின் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் தற்போது அமலில் உள்ள பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகள் போதுமானவையா என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளன.





