குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் ணியாற்றிய நபர் மீது கடும் குற்றச்சாட்டு – 15 குழந்தைகள் பாதிப்பு
கிடாவில் பணியாற்றிய நபர் மீது கடும் குற்றச்சாட்டு – 15 குழந்தைகள் பாதிப்பு
சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் (Kita) பணியாற்றிய ஒருவருக்கு எதிராக மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. Bern Public Prosecutor’s Office தரப்பின் குற்றச்சாட்டின்படி, அந்த நபர் தனது பணிக்காலத்தில் 15 குழந்தைகளை பாலியல் முறைகேடாக துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் Winterthur மற்றும் Bern நகரங்களில் உள்ள தனியார் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குற்றச்சாட்டுக்குட்பட்ட நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, 2022 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் ஒரு தாய் இந்த நபர் மீது குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து, வின்டர்தூரில் உள்ள மையம் போலீசில் புகார் அளித்தது. விசாரணை தொடங்கப்பட்டாலும், போதுமான ஆதாரம் இல்லை என்ற காரணத்தால் அது பின்னர் நிறுத்தப்பட்டது. இதற்கிடையில், அந்த நபர் பெர்ன் நகரில் உள்ள மற்றொரு கிடாவுக்கு மாறி, அங்கு மீண்டும் இதே போன்ற குற்றங்களை மேற்கொண்டிருக்கலாம் என குற்றச்சாட்டு கூறுகிறது.
குற்றப்பத்திரிகையின் படி, 1 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தனியாக இருந்த நேரங்களில், மூடப்பட்ட அறைகளில் — தூங்கும் அறைகள், பொதுமறைகள் மற்றும் கழிப்பறைகள் போன்ற இடங்களில் — பல நிமிடங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த நபர் குறித்து முன்பே எச்சரிக்கைகள் இருந்ததாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020 ஆம் ஆண்டிலேயே ஒரு தாய் தனது 3 வயது குழந்தையின் மூலம் சந்தேகங்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், குழந்தைகளை தனியாக விடாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகள் வலுப்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு மேலாக, கிடாவில் பணிபுரிந்த ஒருவரும் சந்தேகத்தை முன்வைத்ததாக கூறப்படுகிறது. அவர், குறித்த நபர் ஒரு குழந்தையுடன் அசாதாரணமாக நடந்து கொண்டதை கவனித்து மேலதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் “அளவுக்கு மீறிய நடத்தை” என விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தகவல்கள் குறித்து, சம்பந்தப்பட்ட அமைப்பின் நிர்வாகம் “இவை முற்றிலும் புதிய தகவல்கள்” என தெரிவித்துள்ளது. இதனை முழுமையாக விசாரிப்போம் என்றும், இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகள் குறித்து சுவிட்சர்லாந்தில் மீண்டும் தீவிரமான விவாதத்தை உருவாக்கியுள்ளது.





