சூரிச் நகர மைய வங்கியில் ஆயுதத்துடன் வந்த நபர் கைது
சூரிச் நகர மைய வங்கியில் ஆயுதத்துடன் நுழைந்த நபர் கைது
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகர மையத்தில் உள்ள ஒரு வங்கியில் ஆயுதத்துடன் இருந்த நபரை சூரிச் நகர போலீசார் வியாழக்கிழமை நண்பகலில் கைது செய்துள்ளது. ஜனவரி 8, 2026 அன்று நண்பகல் 12 மணிக்கு சற்று முன், (Urania) உரானியா மற்றும் Bahnhofstrasse சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ள UBS வங்கி கிளையில் சந்தேகத்திற்கிடமான ஒருவர் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே போலீஸ் ரோந்து குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. வங்கியின் உள்ளே ஒரே ஒரு நபர் மட்டும் இருந்ததாகவும், அவர் எந்தவித எதிர்ப்பும் இன்றி காவல்துறையினரிடம் சரணடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யும் போது, அந்த நபர் ஒரு கைத் துப்பாக்கியை உடன் வைத்திருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
ஆனால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அந்த ஆயுதத்தை பயன்படுத்தி யாரையும் நேரடியாக மிரட்டியதாகவோ அல்லது வங்கியில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவோ எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணைக்காக, 29 வயதுடைய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அந்த நபர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவர் வைத்திருந்த துப்பாக்கி உண்மையான ஆயுதம் அல்ல, மாறாக ஒரு போலி ஆயுதம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அந்த நபர் எந்த நோக்கத்தில் வங்கிக்குள் நுழைந்தார் மற்றும் அவரது பின்னணி என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் காரணமாக சூரிச் நகர மையத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டாலும், பொதுமக்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என சூரிச் நகர போலீசார் உறுதி செய்துள்ளது.
© Kapo ZH





