சுவிஸ் ரயில்வே மீது இனவெறி குற்றச்சாட்டு – பயணச்சீட்டில் “ஹமாஸ்” என அச்சிடப்பட்ட சர்ச்சை
சுவிஸ் ரயில்வே மீது இனவெறி குற்றச்சாட்டு – பயணச்சீட்டில் “ஹமாஸ்” என அச்சிடப்பட்ட சர்ச்சை
சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி ரயில்வே நிறுவனம் (SBB) மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. காரணம், இணையத்தில் பரவிய புகைப்படம் ஒன்று. அதில், ஒரு பயணச்சீட்டில் பயணியின் பெயருக்குப் பதிலாக “ஹமாஸ்” என்று அச்சிடப்பட்டிருந்தது.
அந்த சீட்டின் உரிமையாளர் பாலஸ்தீனத் தஞ்சம் தேடுபவர் எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதும், பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பயணியிடம் இழிவாக நடந்து கொண்டது இனவெறி செயலாகும் எனக் குற்றஞ்சாட்டி, உடனடி நடவடிக்கை எடுக்கவும் பொது மன்னிப்பு கோரவும் பலர் வலியுறுத்தினர்.

பெருகும் எதிர்ப்புகளுக்கு பதிலளித்த சுவிஸ் ரயில்வே நிறுவனம், இந்தச் சம்பவம் வருத்தமளிப்பதாக தெரிவித்ததோடு, உள்துறை விசாரணை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், தனது நடத்தை விதிமுறைகளில் (Code of Conduct) வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எதிராக எந்தவித பாகுபாடும் செய்யக் கூடாது என்பதையும், அனைவரிடமும் மரியாதையுடனும் சமத்துவத்துடனும் நடந்து கொள்ள வேண்டியது கடமையாகும் என்பதையும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து போன்ற பன்முக இன, கலாச்சாரங்களுடன் கூடிய சமூகத்தில், பொதுச் சேவை நிறுவனங்கள் தங்கள் நம்பகத்தன்மையையும் நியாயத்தையும் பேணுவது மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாகும். இந்த வழக்கு, அந்நாட்டில் தஞ்சம் தேடும் பாலஸ்தீனப் பயணிகளின் நிலைமை மீதான விவாதத்தையும், பொதுச்சேவைகளில் இனவெறி மற்றும் பாகுபாடு தடுக்கும் நடவடிக்கைகளின் அவசியத்தையும் மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.
© WRS





