குடியேற்ற எதிர்ப்பு வாக்கெடுப்பு நிறைவேறினால் சுவிட்சர்லாந்தில் கடும் தொழிலாளர் பற்றாக்குறை அபாயம்

குடியேற்ற எதிர்ப்பு வாக்கெடுப்பு நிறைவேறினால் சுவிட்சர்லாந்தில் கடும் தொழிலாளர் பற்றாக்குறை அபாயம்
சுவிட்சர்லாந்தில் முன்வைக்கப்பட்டுள்ள “No to 10 million” குடியேற்ற எதிர்ப்பு மக்கள் முன்முயற்சி நிறைவேறினால், எதிர்காலத்தில் நாட்டில் இலட்சக்கணக்கான தொழிலாளர் பற்றாக்குறை உருவாகக்கூடும் என புதிய ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Demografik ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட பகுப்பாய்வின்படி, ஜூன் 14ஆம் திகதி நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் இந்த முன்முயற்சி ஏற்றுக்கொள்ளப்பட்டால், சுவிட்சர்லாந்தின் தொழிலாளர் வழங்கல் “கணிசமாக குறையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பிறப்பு விகிதம் குறைவதும், ஓய்வுபெறும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் தொடர்ந்தால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

ஆய்வில் பல்வேறு எதிர்கால நிலைமைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. அதில் மிகவும் சாதகமான சூழ்நிலையில்கூட சுமார் 87,000 தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளை மிக மோசமான நிலைமையில் 2 இலட்சத்து 45 ஆயிரம் வேலைகளுக்கு பணியாளர்கள் தேவைப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம், கட்டுமானம், போக்குவரத்து, தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகள் போன்ற பல முக்கிய துறைகள் வெளிநாட்டு தொழிலாளர்களை அதிகமாக நம்பியுள்ளதால், குடியேற்ற கட்டுப்பாடுகள் சுவிஸ் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த “No to 10 million” முன்முயற்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை 10 மில்லியனை மீறாத வகையில் குடியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனால் எதிர்ப்பாளர்கள், இது பொருளாதாரம் மற்றும் ஓய்வூதிய அமைப்புக்கு பெரிய சவால்களை உருவாக்கும் என கூறுகின்றனர்.





