கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்து விசாரணையில் இத்தாலி அதிகாரிகள் இணைப்பு சுவிட்சர்லாந்தின் வலைஸ் (Valais) கன்டோனில் உள்ள Crans-Montana பகுதியில் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட கொடூர தீ விபத்து தொடர்பான விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் சர்வதேச அளவிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், இத்தாலி அதிகாரிகள் இந்த வாரம் சுவிட்சர்லாந்து வரவுள்ளனர். Rome நகர பொது வழக்கறிஞர் அலுவலகத்தைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள், Sion நகரில் இரண்டு நாட்கள் தங்கி விசாரணை தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை ஆய்வு செய்ய உள்ளனர். இந்த பயணம், சுவிட்சர்லாந்து அதிகாரிகள் ஏற்றுக்கொண்ட பரஸ்பர சட்ட உதவி கோரிக்கையின் ஒரு பகுதியாக இடம்பெறுகிறது. இருப்பினும், விசாரணையின் முழுப்பொறுப்பும் வலைஸ் (Valais) கன்டோன் வழக்கறிஞர்களிடமே தொடரும். எந்த ஆதாரங்களை பகிர வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் அவர்களது கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைந்த நடவடிக்கை, எல்லை தாண்டிய விசாரணை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்த தீ விபத்தில் உயிரிழந்த 41 பேரில் ஆறு பேர் இத்தாலியர்கள் என்பதால், இத்தாலி அதிகாரிகளின் நேரடி ஈடுபாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. WRS