சுவிட்சர்லாந்தில் மீண்டும் பனிப்பொழிவு – மே மாதத்திலும் குளிரால் மக்கள் அதிர்ச்சி

சுவிட்சர்லாந்தில் மீண்டும் பனிப்பொழிவு – மே மாதத்திலும் குளிரால் மக்கள் அதிர்ச்சி
சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் இன்று காலை மக்கள் மழைச் சத்தத்துடன் விழித்தெழுந்த நிலையில், சில இடங்களில் வெள்ளை பனிப்படலமும் காணப்பட்டதால் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.
மே மாத நடுப்பகுதியில் வழக்கமாக ஏற்படும் (ஐஸ் ஹைலிகன் ) “Eisheiligen” எனப்படும் குளிர் நாட்கள் இந்த ஆண்டும் தனது தாக்கத்தை காட்டி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பல விவசாயிகள் இன்னும் பயிர் நடவு பணிகளை தாமதப்படுத்தி வருகின்றனர்.
திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை வெப்பநிலை கணிசமாக குறைந்ததால், சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
St. Gallen கன்டோனில் உள்ள Atzmännig பகுதியில், கடல்மட்டத்திலிருந்து வெறும் 824 மீட்டர் உயரத்தில் இருந்தபோதும், நிலப்பரப்பு முழுவதும் பனியால் மூடப்பட்டிருந்தது.

அதேபோல் Fribourg கன்டோனில் உள்ள Charmey பகுதியில் கூட மக்கள் பனியால் மூடப்பட்ட மலைப்பகுதிகளை இன்று காலை கண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Adelboden பகுதியில் அதிகளவு பனி பெய்ததால், சிலர் வீட்டு நுழைவுப் பாதைகளை பனியை அகற்றி சுத்தப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் Wildhaus பகுதியிலும் சுமார் 1200 மீட்டர் உயரத்தில் பனிப்படலம் உருவாகியுள்ளது.
இதற்கிடையில், புதன்கிழமை அதிகாலை மற்றும் காலை நேரங்களில் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் நில மட்ட உறைபனி (ground frost) உருவாகக்கூடும் என MeteoSwiss எச்சரித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 5 டிகிரிக்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், தோட்டப் பயிர்கள் மற்றும் குளிர் தாக்கத்திற்கு எளிதில் பாதிக்கப்படும் தாவரங்களை பாதுகாக்க மக்கள் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





