பனி புயல் தாக்கம்: மின்தடை, சாலை விபத்துகள், கோத்தார்ட் சுரங்கம் மூடல் சுவிட்சர்லாந்தில் கடுமையான குளிர்கால வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்தடை மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் பதிவாகியுள்ளன. பெர்ன் கன்டோனில் உள்ள டியெம்டிக்தால் (Diemtigtal) பள்ளத்தாக்கு பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பெரிய அளவிலான மின்தடையால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டு இணைப்புகள் பாதிக்கப்பட்டன. இந்த மின்தடை காலை 5.52 மணியளவில் தொடங்கியதாகவும், டியெம்டிகன் (Diemtigen) பகுதி சுமார் இரண்டு மணி நேரத்தில் மீண்டும் மின்சாரம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளத்தாக்கின் பிற கிராமங்களில் மின்சாரம் திரும்ப பெற மேலும் நேரம் எடுத்துக்கொண்டது. இறுதியாக காலை 10.30 மணியளவில் முழுப் பகுதியும் மின்சாரம் பெற்றது. இந்த தடங்கல் கடும் பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டி சுமை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என மின்சார நிறுவனம் BKW தெரிவித்துள்ளது. இதேவேளை, மத்திய சுவிட்சர்லாந்திலும் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோத்தார்ட் சுரங்கம் (Gotthard Tunnel) மாலை நேரத்தில் மூடப்பட்டதால் வாகன நெரிசல் ஏற்பட்டது. A2 நெடுஞ்சாலையில் வாசன் (Wassen) மற்றும் கோஷெனன் (Göschenen) இடையே கனரக வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தெற்கு பகுதியில் க்வின்டோ (Quinto) முதல் ஐரோலோ (Airolo) வரை சுமார் 2 கிலோமீட்டர் நீளமான வாகன வரிசை உருவானது. குளிர்கால சாலை நிலைமைகளால் சென்ட்கேலன் கன்டோனல் காவல் துறை பல விபத்துகள் பதிவானதாக தெரிவித்துள்ளது. பெரும்பாலும் வாகனங்கள் வழுக்கிச் சாலையை விட்டு விலகுதல் அல்லது பின்னால் மோதுதல் போன்ற சம்பவங்களே இடம்பெற்றன. Appenzell Ausserrhoden பகுதியிலும் இதேபோன்ற விபத்துகள் ஏற்பட்டாலும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை. கிரௌவுண்டன் பகுதியில் பனிப்புயல் வீசிய நிலையில், பனிச்சரிவு அபாயம் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பல பகுதிகளில் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மிட்டெலாந்து பகுதிகளில் பனி பெய்தாலும், பிற்பகலில் சுமார் 5 டிகிரி வெப்பநிலை காரணமாக அது நீடிக்கவில்லை. வானிலை ஆய்வு அலுவலகம் தெரிவித்ததாவது, ஆல்ப்ஸ் வடக்கு சரிவுகளில் 600 மீட்டர் உயரத்திற்கு மேல் 10 முதல் 30 செ.மீ. வரை புதிய பனிப்பொழிவு பதிவாகும் என்றும், சில இடங்களில் 40 செ.மீ. வரை கூட அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதே நேரத்தில், டிசினோ கன்டோனில் வறட்சியான நிலைமைகள் காரணமாக வெளிப்புற தீ ஏற்றுவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வெப்பநிலை அதிகரிக்கும் நிலையில், ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை மிட்டெலாந்து பகுதிகளில் 16 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.