Burgdorf நகரில் புலம்பெயர் எதிர்கால சந்ததிக்கான வழிகாட்டி கருத்தரங்கு
Burgdorf நகரில் புலம்பெயர் எதிர்கால சந்ததிக்கான வழிகாட்டி கருத்தரங்கு

Burgdorf நகரில் புலம்பெயர் எதிர்கால சந்ததிக்கான வழிகாட்டி கருத்தரங்கு
சுவிட்சர்லாந்தின் Burgdorf நகரில், 30.05.2026 அன்று புலம்பெயர் தமிழர் எதிர்கால சந்ததியினருக்கான வழிகாட்டி கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு திருமதி சிவாஜினி மற்றும் திரு ராஜ்கண்ணன் ஆகியோரின் திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைப்பில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழும் அடையாளமும்”, “கல்வியும் கற்பிக்கும் முறைமையும்”, “பொருளாதாரமும் நிதியும்”, “கலையும் கல்வியியலும்”, “சர்வதேச உறவு முறைமை” உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிறப்பு உரைகள் இடம்பெற்றன. ஒவ்வொரு உரையும் பார்வையாளர்களிடையே ஆழமான சிந்தனையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
தமிழும் அதன் அடையாளமும்
நோர்வேயை சேர்ந்த எழுத்தாளரும் பல்துறை ஆளுமையுமான திரு ரூபன் சிவராஜா, “தமிழும் அதன் அடையாளமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ்மொழி, இலக்கியம், கல்விப் பார்வை, உறவு மற்றும் உணர்வின் வெளிப்பாடு ஆகியவற்றுடன் தொல்காப்பிய மரபின் சிறப்புகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.

கல்வியும் கற்பிக்கும் முறைமையும்
சுவிட்சர்லாந்தில் பாடசாலை அதிபராக பணியாற்றும் திருமதி ஆனந்தன் திவ்வியா, குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பார்த்தே கற்றுக்கொள்கிறார்கள் என குறிப்பிட்டார். குடும்ப சூழல், பெற்றோரின் அணுகுமுறை, குழந்தைகளின் மனநிலை, தன்னம்பிக்கை வளர்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம் போன்ற அம்சங்களை மையப்படுத்தி அவர் உரையாற்றினார்.
பொருளாதாரமும் நிதியும்
சர்வதேச சந்தை மற்றும் நிதி நிபுணரான திரு வி. பிரகாஷ், பொருளாதாரம் மற்றும் முதலீடு குறித்த விளக்க உரையாற்றினார். சொத்து முதலீடு, பங்குச்சந்தை, வீடு, நிலம், தங்கம் போன்றவற்றின் பெறுமதி, “Good Debt” மற்றும் “Bad Debt” ஆகிய கருத்துக்கள் மற்றும் தேவைக்கேற்ப வழங்கப்படும் உதவித்தொகைகள் தொடர்பிலும் அவர் விளக்கமளித்தார்.
கலையும் இசையும்
நோர்வேயை சேர்ந்த கலை ஆசிரியரும் நடன அமைப்பாளருமான திருமதி கவிதா லஷ்மி, இசை மற்றும் நடன துறைகளில் மாற்றம் அவசியம் என வலியுறுத்தினார். பாரம்பரிய கலைகளுக்கிடையேயான பாகுபாடுகள் வருந்தத்தக்கவை என்றும், இலங்கைத் தமிழர் பிள்ளைகள் கலைத்துறையில் சிறப்பான சாதனைகளை படைத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
சர்வதேச உறவுமுறை
சர்வதேச உறவு நிபுணரான திரு K. ராஜ்கண்ணா, தமிழர்கள் தமது அடையாளத்தை மட்டும் பாதுகாப்பதற்குப் பதிலாக உலகளாவிய தளங்களில் தங்களது நிலைப்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்தார். கல்வி, மொழி மற்றும் பொருளாதாரம் அதிகார அமைப்புகளோடு இணைந்துள்ளன என்றும், உலக அரசியல் மாற்றங்கள் ஆசியாவை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சுவிஸ் சமூகத்தில் தமிழர்கள் தொடர்பான தவறான புரிதல்கள் காணப்படுவதாகவும், அவற்றை மாற்ற பக்கச்சார்பற்ற தகவல்களை வெளிப்படுத்துவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இளையோர் அமைப்பின் பங்கேற்பு
“Phoenix” என்ற இளையோர் அமைப்பினரும் கருத்தரங்கில் கலந்துகொண்டு தமிழர் அரசியல் பிரச்சினைகள், கலாசாரம், நில மீட்பு மற்றும் அரசியல் தீர்வுகள் தொடர்பாக தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர். நிகழ்வில் Swiss Passport, Eelam Passport மற்றும் அடையாள அட்டைகள் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ஒவ்வொரு உரையின் முடிவிலும் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் கலந்துரையாடல் இடம்பெற்றது.
சுவிட்சர்லாந்தில் இதுவரை இசை, நடனம், திரைப்படம் மற்றும் விழாக்கலைகள் மையப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் அதிகம் நடைபெற்ற நிலையில், இந்நிகழ்வு இரண்டாவது தலைமுறை தமிழர் சந்ததிக்கான சிந்தனைமிக்க வழிகாட்டி முயற்சியாக பார்க்கப்படுகின்றது.
சுவிஸிலிருந்து
பொலிகை ஜெயா





