ஜெனீவாவில் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்த விபத்து; இரு ஓட்டுநர்களுக்கு கொலை குற்றச்சாட்டு சுவிட்சர்லாந்தின் Geneva நகரில் இடம்பெற்ற உயிரிழப்புக்குக் காரணமான ‘ஹிட் அண்ட் ரன்’ விபத்து தொடர்பாக, இந்த ஆண்டுக்குள் இரு வாகன ஓட்டுநர்கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் Lausanne நோக்கிச் செல்லும் சாலையில் நடந்தது. 31 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சாலை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வழக்கறிஞர்களின் தகவலின்படி, அந்த நேரத்தில் 22 மற்றும் 33 வயதுடைய இரு ஓட்டுநர்கள் ஏரிக்கரையோர சாலையில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக வேகப்போட்டியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஓட்டிய வாகனங்கள் மணிக்கு சுமார் 150 கிலோமீட்டர் வேகத்தை எட்டியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் போட்டியின் போது, ஒருவரின் வாகனம் சைக்கிள் ஓட்டுநரை நேரடியாக மோதியதாகவும், அதுவே உடனடி உயிரிழப்புக்கு காரணமானதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்திற்குப் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய இருவருக்கும் கொலை உள்ளிட்ட பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தில் சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறி அதிவேக ஓட்டம் மேற்கொள்வது மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்படுவதுடன், உயிரிழப்பு ஏற்படும் நிலையில் சட்டரீதியான தண்டனைகள் மேலும் கடுமையாக இருக்கும். WRS