புத்தாண்டு இரவில் சூரிசில் பதற்றமான நிலை – பல வன்முறை சம்பவங்கள் பதிவு.! பலர் கைது
புத்தாண்டு இரவில் சூரிசில் பதற்றமான நிலை – பல தாக்குதல் சம்பவங்கள், கைது நடவடிக்கைகள்
புத்தாண்டு கொண்டாட்டமான ‘சில்வெஸ்டர் சௌபர்’ நிகழ்ச்சிக்கான பெரிய அளவிலான பாதுகாப்புப் பணிகளுக்கு மேலாக, 2025 டிசம்பர் 31 மற்றும் 2026 ஜனவரி 1 இடையிலான இரவில் சூரிச் நகர போலீசார் பல்வேறு சம்பவங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆண்டுமாற்ற இரவில் நகரின் பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை, சட்டமீறல் மற்றும் அவசர நிலைகள் காரணமாக காவல்துறைக்கு மிகுந்த சுமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளைப் போலவே, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பல்லாயிரக்கணக்கான மக்கள் சூரிச் ஏரிக்கரையில் அமைந்துள்ள சில்வெஸ்டர் சௌபர் நிகழ்வில் பங்கேற்றனர். தனிப்பட்ட முறையில் பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த போதும், பலர் அந்த விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டத்தின் நடுவே பட்டாசுகளை வெடித்தனர்.
இதன் காரணமாக பலரை காவல்துறை சோதனை செய்ததுடன், பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, சிலருக்கு அப்பகுதியை விட்டு செல்ல உத்தரவிடப்பட்டது. நள்ளிரவுக்குப் பிறகு 12.15 மணியளவில், ஆபத்தான மற்றும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வைத்திருந்த 19 வயதுடைய ஒரு சுவிஸ் இளைஞரை நகர காவல்துறை கைது செய்தது.
இதற்கிடையில், நள்ளிரவுக்கு சற்றுமுன் Limmatquai (லிம்மாட்குவாய்) பகுதியில் உள்ள ‘டெராஸ்ஸே’ உணவகத்தின் அருகே ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், மார்புப் பகுதியில் கத்திக் குத்து காயங்களுடன் இருந்த 19 வயதுடைய ஆப்கானிஸ்தான் இளைஞரை கண்டனர். அவசர சிகிச்சைக்குப் பிறகு, அவர் தீவிர நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சம்பவத்தின் சூழ்நிலைகள் இன்னும் தெளிவாகவில்லை. இது தொடர்பான விசாரணைகளை அரசு வழக்கறிஞர் அலுவலகம் I மற்றும் Kantonspolizei Zürich மேற்கொண்டு வருகின்றன. இந்த சம்பவம் குறித்து சாட்சிகளை காவல்துறை தேடி வருகிறது.
அதேபோல், நள்ளிரவு 12 மணியளவில், ஹோஹென்பூல் தெருவில் உள்ள ஒரு பூங்கா இருக்கையில், நகர காவல்துறையினர் காயமடைந்த நிலையில் இருந்த மற்றொரு 19 வயதுடைய ஆப்கானிஸ்தான் இளைஞரை கண்டனர். அவருக்கும் மார்புப் பகுதியில் கத்திக் குத்து காயம் இருந்தது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணியும் தெளிவாக இல்லாத நிலையில், நகர காவல்துறையும் அரசு வழக்கறிஞர் அலுவலகமும் விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கும் சாட்சிகள் கோரப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில், வால்ஷே தெருவில் திருட்டு முயற்சி ஒன்று நடைபெறுவதாக தகவல் கிடைத்ததும், உடனடியாக சென்ற காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே இரு சந்தேக நபர்களை கைது செய்தனர். உடைந்த கண்ணாடி மற்றும் திருட்டு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. 28 வயதுடைய அல்ஜீரிய குடிமகன் மற்றும் 16 வயதுடைய மொராக்கோ இளைஞர் மேலதிக விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதன்பின்னர் அதிகாலை 2.30 மணியளவில், ‘பியாச்சா செல்லா’ பகுதியில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக சென்ற காவல் ரோந்து குழுவின் போது, தொடர்பில்லாத ஒருவர் திடீரென ஒரு காவலரை தாக்கினார். இதில் லேசான காயமடைந்த காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தாக்குதல் நடத்திய 30 வயதுடைய சுவிஸ் குடிமகன் கைது செய்யப்பட்டார்.
இரவு முழுவதும் சண்டைகள், சொத்து சேதம், குப்பை தொட்டிகள் மற்றும் சிறிய பொருட்களுக்கு தீ வைப்பது போன்ற பல சம்பவங்கள் பதிவானது. ஐந்து பேர் மதுபோதையால் சூரிச் மதுவிலக்கு மற்றும் பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். 16 மற்றும் 17 வயதுடைய இரு இளைஞர்கள் கடும் மதுபோதையால் நேரடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், புத்தாண்டுக்கு முன்பே தனிப்பட்ட பட்டாசு பயன்பாடு தொடர்பாக சுமார் இருபதுக்கும் மேற்பட்ட முறை நகர காவல்துறை தலையீடு செய்ததாகவும், பல பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூலம்: நகர காவல்துறை, சூரிச்





