ஜெனீவா ஐ.நா அலுவலகம் கட்டிடத்தில் வெடிகுண்டு பீதி : போலீசார் தீவிரம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகர பொலிசார், வெடிகுண்டு மிரட்டல்கள் காரணமாக நேற்று முழுவதும் பரபரப்பாக காணப்பட்டார்கள். நேற்று பகல் நேரத்தில், ஜெனீவாவிலுள்ள Cornavin என்னும் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளதாக மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. உடனடியாக அங்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்த பொலிசார் அந்த பகுதியை கட்டுப்பாட்டுக்குள் எடுத்து சோதனை நடத்தினார்கள். ஆனால், அங்கு வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து, மதியம் 3.00 மணியளவில், ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் அலுவலகம் அமைந்துள்ள Place des Nations என்னும் கட்டிடத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. உடனடியாக பொலிசார் அங்கு விரைய, நடைபாதையோரமாக ஒரு பார்சல் கிடந்துள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் அதை ஆராய, அதுவும் வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்தது. பொலிசார் அந்த மர்ம அழைப்புகள் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.