பெர்ன்–பெல்ப் விமான நிலையத்தில் புதிய செயற்கைக்கோள் வழிநடத்தும் தரையிறக்க முறை அறிமுகம்
பெர்ன்–பெல்ப் விமான நிலையத்தில் புதிய செயற்கைக்கோள் வழிநடத்தும் தரையிறக்க முறை அறிமுகம்
சுவிட்சர்லாந்தின் பெர்ன்–பெல்ப் (Bern-Belp) விமான நிலையத்தில் நீண்ட கால திட்டமிடல் மற்றும் சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு புதிய செயற்கைக்கோள் வழிநடத்தும் கருவி அடிப்படையிலான தரையிறக்க முறை 19 மார்ச் 2026 முதல் அமலுக்கு வருகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிடப்பட்டு வந்த இந்த புதிய தெற்கு அணுகுமுறை, தற்போது பயன்படுத்தப்பட்டு வந்த பார்வை அடிப்படையிலான தரையிறக்க நடைமுறையை மாற்றுகிறது.
புதிய முறையின் மூலம் விமானங்கள் தெற்குப் பகுதியிலிருந்து ஓடுதளம் 32 (Runway 32) நோக்கி செயற்கைக்கோள் வழிகாட்டுதலுடன் பாதுகாப்பாக அணுக முடியும். இதுவரை பயன்படுத்தப்பட்ட CITY மற்றும் ROMEO எனப்படும் சுற்றுப்பாதை அணுகுமுறைகள் இனி நிறுத்தப்படுகின்றன. இதன் மூலம் பெர்ன் (Bern) நகரத்திற்கும், விமான நிலையத்தின் கிழக்குப் பகுதிகளில் உள்ள பல நகராட்சிகளுக்கும் விமான சத்த அழுத்தம் குறையக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்படுவதால் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டில் உள்ள குறுக்குவழிகள் குறைவதுடன், விமான இயக்கத்தை மேலும் எளிதாகவும் திறம்படவும் நிர்வகிக்க முடியும். இதனால் விமானிகளைப் போலவே வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் பணிச்சுமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வழித்தடத்தின் மூலம் பெர்ன், ஒஸ்டர்முண்டிகன் (Ostermundigen), பெர்ன் அருகிலுள்ள முரி (Muri bei Bern – Gümligen), ரூஃபெனாக்ட் (Rüfenacht) மற்றும் ரூபிகன் (Rubigen) போன்ற பகுதிகளில் விமான சத்தம் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தென்கிழக்கு பகுதியில் உள்ள சில இடங்களில் குறிப்பிட்ட அளவு கூடுதல் விமானப் பறப்புகள் மேலே கடந்து செல்லும் நிலை ஏற்படலாம்.

இருப்பினும் புதிய அணுகுமுறையில் விமானங்கள் சுமார் 4 டிகிரி அளவிலான அதிக சாய்வு கொண்ட கோணத்தில் தரையிறங்குவதால், மேலும் அந்த வழியில் பறக்கும் விமானங்களின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதால், ஆரே ஆற்றுப்பள்ளத்தாக்கு (Aaretal) பகுதிகளில் கூடும் சத்தம் மொத்தத்தில் மிகக் குறைவாகவே இருக்கும் என்று அதிகாரிகள் விளக்குகின்றனர்.
தெற்கிலிருந்து ஓடுதளம் 32க்கு வரும் இந்த புதிய அணுகுமுறைக்கு கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு வழித்தடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. நடைமுறையில் பெரும்பாலும் கிழக்கு வழித்தடமே பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான வான்வழி பகுதி, நிலைமையைப் பொருத்து சுமார் 30 நிமிடங்களுக்கு முன்பாகவே செயல்படுத்தப்படும்.
இந்த புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்படுவதால் விமானப் போக்குவரத்து எண்ணிக்கை அதிகரிக்காது என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆனால் காற்றின் திசை மற்றும் வேகத்தைப் பொறுத்து சில தரையிறக்கங்கள் ஓடுதளம் 14 இற்குப் பதிலாக ஓடுதளம் 32 நோக்கி மாற்றப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பையும், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் சமநிலைப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த புதிய செயற்கைக்கோள் அடிப்படையிலான அணுகுமுறை அறிமுகப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது.
Kantonspolizei





