Swiss News In Tamil

குற்றவாளிகளின் தேசியத்தையும் வெளியிட வேண்டும்: சுவிஸ் நாடாளுமன்ற மேலவையின் முடிவு

குற்றவாளிகளின் தேசியத்தையும் வெளியிட வேண்டும்: சுவிஸ் நாடாளுமன்ற மேலவையின் முடிவு

சுவிட்சர்லாந்தில் இனிமேல் குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்களிடம் வெளியிடும் போது குற்றவாளிகளின் தேசியத்தையும் வெளிப்படையாக குறிப்பிட வேண்டும் என்ற தீர்மானத்தை சுவிஸ் நாடாளுமன்றத்தின் மேலவையான ஸ்டேட்ஸ் கவுன்சில் (Council of States) ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த தொடர்பான பாராளுமன்ற முன்மொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் அங்கீகரிக்கப்பட்டது. இதன் மூலம், குற்றச்செயல்கள் குறித்த தகவல்களை வெளியிடும் போது குற்றவாளிகள், சந்தேகநபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் வயது, பாலினம் மற்றும் தேசியத்தை காவல்துறையினர் முறையாக வெளியிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

ஆனால் இதைச் செய்வதில் தனியுரிமை பாதுகாப்பு காரணங்களால் பிரச்சினை ஏற்படும் சூழ்நிலைகள் இருக்குமானால் அல்லது அந்த தகவல்களின் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களை நேரடியாக அடையாளம் காணும் அபாயம் இருந்தால் அவ்வாறான தகவல்களை வெளியிட வேண்டிய கட்டாயம் இருக்காது என்று முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவை ஆதரித்தவர்கள் கூறுவதாவது, வெளிப்படைத்தன்மை என்பது ஜனநாயக சமூகத்தின் முக்கிய அடிப்படையாகும். அதனால் குற்றச்செயலில் ஈடுபட்ட நபரின் தேசியத்தை மறைப்பதற்கான காரணம் எதுவும் இல்லை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் கடந்த சில ஆண்டுகளாக குற்றச் செய்திகள் வெளியிடும் போது சந்தேகநபர்களின் தேசியத்தை குறிப்பிட வேண்டுமா என்பது குறித்து அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் விவாதங்கள் இடம்பெற்று வந்தன. இந்த புதிய முடிவு, எதிர்காலத்தில் காவல்துறை தகவல் வெளியீட்டு நடைமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Related Articles

Back to top button