வாலெய்ஸில் சிறிய விமானம் விபத்து! மூன்று பேர் பரிதாப உயிரிழப்பு!
வாலெய்ஸில் சிறிய விமானம் விபத்து! மூன்று பேர் பரிதாப உயிரிழப்பு!

வாலெய்ஸில் சிறிய விமானம் விபத்து! மூன்று பேர் பரிதாப உயிரிழப்பு!
சுவிட்சர்லாந்தின் வாலெய்ஸ் மாகாணத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல், லூக்கர்பாட் அருகே உள்ள ஃப்ளூஹால்ப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மாலை 4 மணிக்குச் சற்றுப் பிறகு, சிறிய விமானம் ஒன்று இதுவரை தெளிவாக தெரியாத காரணங்களால் மலைப்பகுதியின் வடக்குச் சரிவில் மோதியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குப் பின்னர் அந்தப் பகுதியில் கடும் புகை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்தவுடன், வாலெய்ஸ் மாகாண மீட்புக் குழுவினர் மூன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் இரண்டு மீட்பு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஆனால், விமானத்தில் இருந்த மூன்று பேரும் உயிரிழந்ததை மட்டுமே மீட்புக் குழுவினரால் உறுதி செய்ய முடிந்தது.
உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணிகள் புதன்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றன.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் போக்குவரத்து பாதுகாப்பு விசாரணை வாரியமான STSB, விபத்துக்கான தொழில்நுட்ப காரணங்களை கண்டறிய விசாரணையை முன்னெடுத்து வருகிறது.
அதே நேரத்தில், சுவிட்சர்லாந்தின் தலைமை வழக்கறிஞர் அலுவலகமும் வாலெய்ஸ் மாகாண காவல்துறையுடன் இணைந்து குற்றவியல் விசாரணையை நடத்தி வருகிறது.
சம்பவ இடத்தில் சியோன் விமான நிலைய தீயணைப்புப் படை உள்ளிட்ட பல்வேறு அவசர மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய பல விமான விபத்துக்கள் இடம்பெற்றுள்ள நிலையில், லூக்கர்பாட் விபத்தும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
விபத்து எவ்வாறு ஏற்பட்டது? விமானம் ஏன் மலைச்சரிவில் மோதியது?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களை STSB விசாரணையின் முடிவுகள் வெளிப்படுத்தும்.





