சுவிட்சர்லாந்தில் 35°C வரை பதிவான கடும் வெப்பம் – அடுத்த வாரமும் நீடிக்கும் என எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் 35°C வரை பதிவான கடும் வெப்பம் – அடுத்த வாரமும் நீடிக்கும் என எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் 35°C வரை பதிவான கடும் வெப்பம் – அடுத்த வாரமும் நீடிக்கும் என எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடுமையான வெப்ப அலை ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவான நிலையில், நீண்டகால வறட்சியால் ஆறுகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதேவேளை, காட்டுத்தீ அபாயமும் அதிகரித்துள்ளதால் பல கண்டன்களில் திறந்த வெளியில் தீ மூட்டுவதற்கு தடை தொடர்ந்து அமலில் உள்ளது.
சுவிட்சராந்து வானிலை சேவையான MeteoSwiss வெளியிட்ட தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை Geneva ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் Central Valais, Basel, Zürich, Biel ஏரி மற்றும் மத்திய சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளிலும் 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவியது.

இந்த வெப்ப அலையின்போதும், ஆல்ப்ஸ் மலையணையின் வடபகுதியில் இரவு நேரங்களில் வெப்பநிலை ஓரளவு குறைவதால் பெரும்பாலான பகுதிகளில் வெப்பமண்டல இரவுகள் (Tropical Nights) அதிகமாக பதிவாகவில்லை. இருப்பினும் Geneva ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஆல்ப்ஸ் தென்பகுதியிலும் இரவு வெப்பநிலை 20 டிகிரிக்குக் கீழ் குறையாத இடங்களும் காணப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை சில மலைப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்திருந்தாலும், நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க அளவிலான குளிர்ச்சி ஏற்படவில்லை. வானிலை நிபுணர்களின் கணிப்பின்படி, அடுத்த வாரத்தின் தொடக்கத்திலும் வெப்பம் தொடரும். வாரத்தின் நடுப்பகுதியில் இருந்து காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால் குறிப்பாக ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கலாம். ஆனால் மத்திய சுவிட்சர்லாந்து (Mittelland) பகுதிகளில் மழை பெய்யுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக காட்டுத்தீ அபாயம் தொடர்ந்து அதிகமாக இருப்பதால், திறந்த வெளியில் தீ மூட்டுவதைத் தவிர்க்கவும், தேவையற்ற வெளிப்புறச் செயல்பாடுகளை நண்பகல் நேரங்களில் குறைக்கவும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.





