A1 நெடுஞ்சாலையில் கவிழ்ந்த டிரெய்லர்… 30-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளால் பரபரப்பு!
A1 நெடுஞ்சாலையில் கவிழ்ந்த டிரெய்லர்... 30-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளால் பரபரப்பு!

A1 நெடுஞ்சாலையில் நடந்த வினோதமான விபத்து, பல மணி நேர போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை மாலை சுமார் 6.15 மணியளவில், சூரிச் நோக்கிச் செல்லும் A1 நெடுஞ்சாலையின் நியூஹாஃப் Neuhofதொழிற்பேட்டை பகுதியில், செம்மறி ஆடுகளை ஏற்றிச் சென்ற டிரெய்லர் திடீரென கவிழ்ந்தது.
பெர்ன் மாகாண காவல்துறையின் தகவலின்படி, டிரெய்லருடன் பயணித்த வாகனம் இன்னும் கண்டறியப்படாத காரணத்தால் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் கவிழ்ந்துள்ளது.

அந்த டிரெய்லரில் 30-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் இருந்தன. இந்த விபத்தில், வாகன ஓட்டுநரும் அவருடன் பயணித்தவரும் எந்தக் காயமும் இல்லாமல் உயிர்தப்பினர்.
மேலும், வாகனத்தில் இருந்த இரண்டு நாய்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவசர மீட்புக் குழுவினர், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயியின் உதவியுடன், அனைத்து செம்மறி ஆடுகளையும் பாதுகாப்பாக மற்றொரு வாகனத்திற்கு மாற்றினர்.
அதிர்ஷ்டவசமாக, ஒரு ஆட்டிற்குக்கூட காயம் ஏற்படவில்லை என்பது இந்தச் சம்பவத்தின் மிகப்பெரிய ஆறுதல் செய்தியாகும்.
பின்னர் சேதமடைந்த டிரெய்லரை இழுவை வாகனம் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்றன.
இதன் காரணமாக, A1 நெடுஞ்சாலை பல மணி நேரம் முழுமையாக மூடப்பட்டதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் கிர்ச்பெர்க் வெளியேறும் வழியாக மாற்றி அனுப்பப்பட்டன.
பெர்ன் மாகாண காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவு, இழுவை சேவை குழுவினர் மற்றும் உள்ளூர் விவசாயி ஆகியோர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து பெர்ன் மாகாண காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது





