உக்ரேன் யுத்தத்தை பயன்படுத்தி சுவிட்சர்லாந்தில் மோசடி உக்ரைனில் இருந்து உதவிக்கான அழைப்புகள் எனக் கூறும் மோசடி மின்னஞ்சல்கள் குறித்து சுவிட்சர்லாந்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக, 'வணக்கம், நான் உக்ரைனில் இருந்து எழுதுகிறேன். எனது ஒரே குழந்தை, ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டார்' என, அனுதாபத்தைப் பெற உணர்ச்சிகரமான கதைகளுடன் தொடங்கும் மின்னஞ்சல்கள் பரவி வருகின்றன. அனுப்பியவர் 'Andriy Svyshchuk' எனக் கூறி, உக்ரைனில் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்க உதவி தேவை என்று கூறுகிறார். Swiss Crime Prevention (SKP) படி, இது ஒரு பொதுவான "ஃபிஷிங்" மோசடி என்பது தெரியவந்துள்ளது. இந்த மோசடி செய்பவர்கள் தங்கள் கதைகளை மிகவும் நம்பக்கூடியதாக மாற்றுவதற்காக தற்போதைய போர் நிகழ்வுகளை காரணம் காட்டி உணர்வு பூர்மாக தகவல் அனுப்புவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Luzern மற்றும் Zurich இன் பொலிஸ் செய்தித் தொடர்பாளர்கள் இந்த "உக்ரைன் மோசடி" ஒரு அறியப்பட்ட தந்திரம் என்பதை உறுதிப்படுத்துகின்றனர். மோசடி செய்பவர்கள் இரக்கத்தைத் தூண்டுவதற்கு உறுதியான கதைகளை உருவாக்குகிறார்கள் மற்றும் உக்ரைனில் நடந்த போர் போன்ற உண்மையான நிகழ்வுகளைப் பயன்படுத்தி, அவர்களின் கூற்றுக்களை மேலும் நம்பகத்தன்மையடையச் செய்கிறார்கள். நீங்கள் அத்தகைய செய்தியைப் பெற்றால், அதை புறக்கணிக்க அல்லது நீக்க Swiss Crime Prevention அறிவுறுத்துகிறது. நெருக்கடியான பகுதிகளுக்கு நன்கொடைகள் வழங்குபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சான்றளிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. (c)nau.ch