சுவிஸில் நீச்சல் குளத்தில் உயிருக்கு போராடிய 3 வயது சிறுமி… நொடியில் நடந்த அதிசயம்!
சுவிட்சர்லாந்தின் துர்காவ் மாகாணத்தில் உள்ள க்ரூஸ்லிங்கனில், மூன்று வயது சிறுமி ஒருவர் நீச்சல் குளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை, பொதுமக்கள் பயன்படுத்தும் நீச்சல் குளத்தில், 3 வயது சிறுமி தண்ணீரில் அசைவின்றி கிடந்ததாக அவசர சேவை மையத்துக்கு தகவல் கிடைத்தது.

தகவல் கிடைத்தவுடன் அங்கிருந்த மருத்துவ நிபுணர் மற்றும் உயிர்காப்பாளர் உடனடியாக உயிர்ப்பிக்கும் சிகிச்சையை தொடங்கினர். அவர்களின் துரிதமான நடவடிக்கையால் சிறுமியின் உயிர் வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக ரெகா விமான ஆம்புலன்ஸ் மூலம் அந்தச் சிறுமி மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக துர்காவ் மாகாண காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தைகள் நீச்சல் குளங்களில் இருக்கும் போது, ஒரு நொடியும் கண்காணிப்பை தவறவிடக் கூடாது என்பதற்கான முக்கிய எச்சரிக்கையாக இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது.