அதிக பனிப்பொழிவால் ரிசார்ட்கள் மூடல்; உணவகங்களுக்கு புதிய சவால்
அதிக பனிப்பொழிவால் ரிசார்ட்கள் மூடல்; முன்பதிவு செய்தவர்கள் வராததால் உணவகங்களுக்கு புதிய சவால்
கடந்த ஆண்டு ஐரோப்பாவின் பல நாடுகளில் போதுமான பனிப்பொழிவு இல்லாததால் பனிச்சறுக்கு ரிசார்ட்கள் சுற்றுலாப்பயணிகள் பற்றாக்குறையை எதிர்கொண்டன. ஆனால் இந்த ஆண்டு சுவிட்சர்லாந்து முற்றிலும் மாறுபட்ட பிரச்சினையை சந்தித்து வருகிறது. இம்முறை குறைவான பனி அல்ல, மாறாக அதிகப்படியான பனிப்பொழிவே சுற்றுலாத்துறைக்கு சவாலாக மாறியுள்ளது.
சுவிஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் தொடர்ச்சியான கடும் பனிப்பொழிவு காரணமாக சில பனிச்சறுக்கு ரிசார்ட்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களாலும், போக்குவரத்து சிக்கல்களாலும் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் முன்கூட்டியே விடுமுறை திட்டமிட்டு, தங்கும் இடங்களும் ஸ்கீ பாஸ்களும் முன்பதிவு செய்திருந்த பலர் தங்கள் பணம் திரும்ப கிடைக்குமா என்ற குழப்பத்தில் உள்ளனர். சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் ரிசார்ட் நிர்வாகங்கள் ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சூரிக் (Zurich) உள்ளிட்ட சில நகரங்களில் உணவகங்கள் வேறு ஒரு சிக்கலை எதிர்கொள்கின்றன. ஆன்லைனில் முன்பதிவு செய்து விட்டு உணவகங்களுக்கு வராமல் இருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிரபலமான ஒரு உணவகத்தின் உரிமையாளர் கூறுகையில், முன்பதிவு செய்தவர்களில் 10 சதவீதத்துக்கும் மேலானோர் வராமல் இருப்பது வழக்கமாகி விட்டதாக தெரிவிக்கிறார். சமீபத்தில் ஒரு மாலை நேரத்தில் முன்பதிவு செய்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் வராத சம்பவமும் நடந்ததாக அவர் கூறியுள்ளார்.

காதலர் தினம் போன்ற சிறப்பு நாட்களிலும் இதே நிலை நீடித்ததாகவும், 110 இருக்கைகள் கொண்ட தனது உணவகத்தில் இத்தகைய ‘நோ-ஷோ’ பிரச்சினை காரணமாக எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல், வருமானமும் செலவும் சமநிலையிலேயே முடிகிறது என அவர் கவலை வெளியிட்டுள்ளார். பணியாளர்கள், உணவுப் பொருட்கள் மற்றும் தயாரிப்பு செலவுகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் வராமல் இருப்பது உணவகங்களுக்கு நேரடி நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
இதனைத் தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்து வராதவர்களுக்கு 50 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராத கட்டணம் விதிக்கும் திட்டத்தை அந்த உணவகம் பரிசீலித்து வருகிறது. சுவிட்சர்லாந்தில் ஆன்லைன் முன்பதிவு நடைமுறை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற நிலையில், ‘நோ-ஷோ’ பிரச்சினை உணவகத் துறையில் அதிகமாக பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.






