‘10 மில்லியனுக்கு இல்லை’ முன்மொழிவு தோல்வியடையும் வாய்ப்பு அதிகம்
‘10 மில்லியனுக்கு இல்லை’ முன்மொழிவு தோல்வியடையும் வாய்ப்பு அதிகம்

‘10 மில்லியனுக்கு இல்லை’ முன்மொழிவு தோல்வியடையும் வாய்ப்பு அதிகம்
சுவிட்சர்லாந்தில் குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள ‘10 மில்லியனுக்கு இல்லை’ (No to 10 million) மக்கள் முன்மொழிவு வாக்கெடுப்பில் தோல்வியடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜூன் 14ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய மக்கள் வாக்கெடுப்பிற்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் வெளியிடப்பட்ட இரண்டு தனித்தனி கருத்துக்கணிப்புகள் இந்த நிலையை வெளிப்படுத்தியுள்ளன.
சுவிட்சர்லாந்து பொது ஒலிபரப்பு நிறுவனம் (SRG SSR) சார்பில் gfs ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, 52 சதவீத வாக்காளர்கள் இந்த முன்மொழிவை “நிச்சயமாக” அல்லது “அநேகமாக” நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர். அதேவேளை, 45 சதவீத மக்கள் இதனை ஆதரிப்பதாக கூறியுள்ளனர்.

இதனுடன் ஒத்த முடிவுகள் Tamedia ஊடகக் குழுமம் வெளியிட்ட கருத்துக்கணிப்பிலும் வெளியாகியுள்ளன. அதன்படி, 52 சதவீத மக்கள் “இல்லை” என வாக்களிக்கத் தயாராக இருப்பதாகவும், 47 சதவீதம் பேர் “ஆம்” என வாக்களிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை எதிர்காலத்தில் 10 மில்லியனை எட்டக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையில் இந்த முன்மொழிவு கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக குடியேற்ற எண்ணிக்கையை குறைத்து, வீட்டு வசதி, போக்குவரத்து மற்றும் சமூக சேவைகளின் மீது ஏற்படும் அழுத்தத்தை தடுக்க வேண்டும் என்று இதன் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் எதிர்ப்பாளர்கள், சுவிட்சர்லாந்தின் பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் சந்தை வெளிநாட்டு பணியாளர்களின் பங்களிப்பை பெரிதும் சார்ந்துள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், இந்த முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால் பொருளாதார வளர்ச்சிக்கும், சர்வதேச உறவுகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இறுதி முடிவு ஜூன் 14ஆம் திகதி நடைபெறும் மக்கள் வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.






