சுவிட்சர்லாந்தின் வாலெய்ஸ் மாநிலத்தில், மிகவும் சவாலான மீட்பு
சுவிட்சர்லாந்தின் வாலெய்ஸ் மாநிலத்தில், மிகவும் சவாலான மீட்பு

சுவிட்சர்லாந்தின் வாலெய்ஸ் மாநிலத்தில், மிகவும் சவாலான மீட்பு…
சுவிட்சர்லாந்தின் வாலெய்ஸ் மாநிலத்தில், மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கை ஒன்றில், 50 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் சிக்கிய மூன்று பேர் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை மாலை, நீடர்கெஸ்டெல்ன் அருகே உள்ள ஜோலிஷ்லூச்ட் பள்ளத்தாக்கில், மூன்று பேர் தாங்களாகவே வெளியேற முடியாமல் சிக்கியதைத் தொடர்ந்து அவசர அழைப்பு விடுக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு ஏர் ஜெர்மாட் மீட்புக் குழுவினர் விரைந்தனர்.
ஆனால் அங்கு காத்திருந்தது மிகப்பெரிய சவால்.
சில பகுதிகளில் பள்ளத்தாக்கு வெறும் இரண்டு மீட்டர் அகலமாகவும், சுமார் 50 மீட்டர் ஆழமாகவும் இருந்தது.
மேலிருந்து பார்க்கும்போது பள்ளத்தாக்கின் அடிப்பகுதி விமானியின் காக்பிட்டிலிருந்து தெரியாத அளவுக்கு அது மிகவும் குறுகலாக இருந்தது.
மேலும், இடியுடன் கூடிய மழை காரணமாக பள்ளத்தாக்கில் அதிகளவு நீரும் ஓடிக்கொண்டிருந்தது.
தீவிர தேடலுக்குப் பிறகு, மூன்று பேரும் பள்ளத்தாக்கின் ஆழத்தில் ஒரு பாறைக்கு அடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ஒரு மீட்பு நிபுணர் 50 மீட்டர் நீளமான லாங்லைன் கயிற்றில் ஹெலிகாப்டரில் இருந்து கீழே இறக்கப்பட்டார்.
அவர் சுமார் 48 மீட்டர் ஆழத்திற்கு பள்ளத்தாக்குக்குள் சென்றார்.
அந்த நிலையில், ஹெலிகாப்டர் விமானியால் மீட்பவரையும் அவரைச் சுற்றியுள்ள பகுதியையும் நேரடியாக பார்க்க முடியவில்லை.

இதனால், விமானி முழுமையாக வானொலி மூலம் கிடைத்த அறிவுறுத்தல்களை நம்பி, ஹெலிகாப்டரை மிகத் துல்லியமாக நிலைநிறுத்த வேண்டியிருந்தது.
மீட்பாளர் கீழே சென்று மூன்று பேரையும் பாதுகாப்பாக மீட்பதற்குத் தயார்படுத்தினார்.
பின்னர், மீட்பாளர் மற்றும் மூன்று பேரும் ஒரே லாங்லைன் மூலம் செங்குத்தாக மேலே தூக்கிச் செல்லப்பட்டனர்.
பாறைச் சுவர்களில் மோதாமல் இருக்க, ஒவ்வொரு அசைவும் விமானிக்கும் மீட்பாளருக்கும் இடையிலான துல்லியமான ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
இறுதியில், மூன்று பேரும் எந்தவித காயமுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, நீடர்கெஸ்டெல்னில் தரையிறக்கப்பட்டனர்.
உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில், விமானியும் மீட்புக் குழுவினரும் காட்டிய துல்லியமான ஒத்துழைப்பு இந்த அதிரடி மீட்பை வெற்றியடையச் செய்துள்ளது.





