மின் விசிறியை இயக்கிவிட்டு தூங்குவது ஆபத்தல்ல – ஜெனீவா மருத்துவர்கள் விளக்கம்
மின் விசிறியை இயக்கிவிட்டு தூங்குவது ஆபத்தல்ல – ஜெனீவா மருத்துவர்கள் விளக்கம்

மின் விசிறியை இயக்கிவிட்டு தூங்குவது ஆபத்தல்ல – ஜெனீவா மருத்துவர்கள் விளக்கம்
சுவிட்சர்லாந்தில் கடும் வெப்ப அலை நிலவி வரும் நிலையில், இரவில் மின்விசிறியை இயக்கிவிட்டு தூங்குவது உடல்நலத்திற்கு ஆபத்தானது என்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ஆனால் இந்தக் கூற்றுகளுக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று ஜெனீவா மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனையின் நுரையீரல் நிபுணரான டாக்டர் லூயிஸ் போன்டெல் (Louise Bondeelle), மின்விசிறி வைரஸ்களை பரப்பும் என்ற நம்பிக்கை தவறானது என்று தெரிவித்துள்ளார். விசிறி இயங்குவதால் வைரஸ் அல்லது தொற்றுநோய்கள் பரவாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காலை எழுந்தவுடன் சிலருக்கு தொண்டை அல்லது மூக்கு வறண்டதாக உணரப்படுவதற்குக் காரணம் விசிறி அல்ல என்றும், அறையில் நிலவும் குறைந்த ஈரப்பதம்தான் அதற்குக் காரணம் என்றும் அவர் விளக்கினார்.

அதேவேளை, விசிறி காற்றோட்டத்தை அதிகரிப்பதால் அறையில் இருக்கும் தூசி மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் நுண்துகள்கள் காற்றில் பரவக்கூடும். எனவே, குறிப்பாக ஒவ்வாமை பிரச்சினை உள்ளவர்கள் விசிறியின் இறக்கைகளை (Blades) அடிக்கடி சுத்தம் செய்து பயன்படுத்துவது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
விசிறியை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளும் குறிப்பிடத்தக்கவை. உடலில் உருவாகும் வெப்பத்தை வியர்வை ஆவியாகும் செயல்முறையின் மூலம் வெளியேற்றுவதற்கு விசிறி உதவுகிறது. இதனால் உடலின் மைய வெப்பநிலையும் இதயத் துடிப்பும் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் காட்டுகின்றன.
தற்போது சுவிட்சர்லாந்தில் வெப்ப அலை காரணமாக வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வரும் நிலையில், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, அறையை குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் தேவையான இடங்களில் மின்விசிறி அல்லது குளிரூட்டும் சாதனங்களைப் பயன்படுத்துவது உடல் நலத்தைப் பாதுகாக்க உதவும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். WRS





