Swiss News In Tamil
ஆல்ப்ஸ் மலையைக் குடைந்து சொத்துக்களைப் பதுக்கும் உலகக் கோடீஸ்வரர்கள்
ஆல்ப்ஸ் மலையைக் குடைந்து சொத்துக்களைப் பதுக்கும் உலகக் கோடீஸ்வரர்கள்

ஆல்ப்ஸ் மலையைக் குடைந்து சொத்துக்களைப் பதுக்கும் உலகக் கோடீஸ்வரர்கள்: சுவிட்சர்லாந்தில் உருவாகும் பிரம்மாண்ட பதுங்கு குழிகள்
உலக அளவில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் தங்களின் அபரிமிதமான செல்வத்தையும், விலைமதிப்பற்ற பொருட்களையும் மிகவும் பாதுகாப்பாகப் பதுக்கி வைப்பதற்காக, சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற ஆல்ப்ஸ் மலையைக் குடைந்து அதிநவீன பதுங்கு குழிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் அரசியல் அமைதியின்மை மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், தங்களது சொத்துக்களைப் பாதுகாக்கப் பாதுகாப்பான இடத்தை எதிர்பார்க்கும் கோடீஸ்வரர்களை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது.

சுவிஸ் தொழிலதிபரான தாமஸ் கேஸ்ஸர் என்பவரின் நிறுவனத்தால், சுவிட்சர்லாந்தில் உள்ள லுங்கர்ன் பகுதியில் இந்த பிரம்மாண்ட திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆல்ப்ஸ் மலையின் பாறைகளைக் குடைந்து, சுமார் நூறு மீட்டர் ஆழத்தில் இத்தகைய இருபது சொகுசு பதுங்கு குழிகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் தங்கக் கட்டிகள், அரிய வகை வைரங்கள், கோடிக்கணக்கிலான விலைமதிப்பற்ற சொகுசுக் கார்கள் மற்றும் உயர்தர மதுபானங்கள் உள்ளிட்டவற்றை மிகப்பத்திரமாகச் சேமித்து வைக்க முடியும்.
சுமார் நூறு ஆண்டுக கால குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் இந்த ஒவ்வொரு பதுங்கு குழிக்கும் ஏறத்தாழ பத்து லட்சம் சுவிஸ் ஃப்ராங்குகள் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து தேசிய வங்கியின் பாதுகாப்பு நிலைக்கு இணையான உயர் தொழில்நுட்பப் பாதுகாப்பு ஏற்பாடுகள் இங்குச் செய்யப்பட்டுள்ளன.
கடுமையான பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படும் என்பதால், பொதுமக்கள் மட்டுமின்றி ஊடகவியலாளர்கள் கூட இதன் நுழைவாயிலைப் பார்வையிட முடியாத அளவுக்குப் பலத்த ரகசியம் காக்கப்படுகிறது.



